செய்திகள்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி ஏற்றார்

Makkal Kural Official

புதுடெல்லி, மே 14–

சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி சுப்ரீம்கோர்ட்டின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பல மத்திய அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் மற்றும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற கவாய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பி.ஆர். கவாய் வரும் நவம்பர் 23ம் தேதி பணி ஓய்வு பெறும் வரை சுமார் 6 மாதங்களுக்கு இந்த பதவியை வகிப்பார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது. 2007 மற்றும் 2010-க்கு இடையில் பணியாற்றிய நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் 2வது தலைமை நீதிபதி கவாய் ஆவார்.

மகாராஷ்டிராவின் அம்ராவதியைச் சேர்ந்தவர் பி.ஆர்.கவாய் (வயது 65). கடந்த 1985ல் வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்த கவாய், மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 1992ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2003ல் மும்பை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாகவும், 2005ல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார்.

அடுத்ததாக, 2019ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சுப்ரீம்கோர்ட் நீதிபதியானார். சுப்ரீம் கோர்ட் வழங்கிய பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளின் பகுதியாக கவாய் இருந்துள்ளார்.

பண மதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது, அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு (ஜம்மு-–காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து) ரத்து நடவடிக்கையை உறுதி செய்தது என்ற தீர்ப்பு வழங்கிய அமர்வில் இவரும் ஒருவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *