புதுடெல்லி, செப். 20
சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டில் அரசியலமைப்பு அமர்வில் விசாரணைக்கு வரும் வழக்குகள் மற்றும் பொது நலன் சார்ந்த வழக்கு விசாரணைகளை சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்வது வழக்கம்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். தற்போது ஹேக் செய்யப்பட்ட இந்தப் பக்கத்தில் அமெரிக்காவின் ரிப்பில் லேப்சின் எக்ஸ்ஆர்பி கிரிப்டோ கரன்சியின் புரொமோஷன் செய்யும் வகையிலான வீடியோ இடம்பெற்றுள்ளன.
இதனிடையே முக்கியத்துவம் வாய்ந்த யூடியூப் சேனல்களை ஹேக்கர்கள் முடக்கி, அதில் தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி முறைகேடு மேற்கொள்வது தொடர்பாக ரிப்பில் லேப்ஸ் நிறுவனம் யூடியூப் தரப்புக்கு புகார் அளித்துள்ளது.
இந்தச் சூழலில் ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கத்தை மீட்கும் பணியில் சுப்ரீம் கோர்ட் தொழில்நுட்பப் பிரிவு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.