கதைகள் சிறுகதை செய்திகள்

சுகர் – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

உதய்க்கு அன்று என்றைக்கும் இல்லாமல் காலை எழுந்ததும் தலை சுற்றியது.

“எதுக்கு தலை சுத்துது. சுகர் இருந்தாலும் பிரஷர் இருந்தாலும் தலை சுத்தும்ன்னு படிச்சிருக்கேன். அது மாதிரி நமக்கு ஏதாவது வந்து இருக்குமோ? என்று பயந்தவன் அருகில் இருக்கும் மருத்துவமனையில் தனக்கு நேர்ந்ததை பற்றிச் சொன்னான். அங்கு ரத்த பரிசோதனை மற்றும் சில பரிசோதனை செய்த மருத்துவர்கள், உதய்க்கு சுகர் இருப்பதாகச் சொன்னார்கள்.

“என்னது எனக்கு சுகரா ? ” அதைக் கேட்டதும் அவனுக்குப் பாதி உயிர் போய்விட்டது.

” என்ன டாக்டர் சொல்றீங்க?”

“ஆமா. உங்களுக்கு சுகர் இருக்கு. மாத்திரை, மருந்து, உணவு கட்டுப்பாடு இருந்தா உங்களுக்கு எதுவும் பண்ணாது. நான் சொல்ற உணவுகளைச் சாப்பிடுங்க. உடற்பயிற்சி செய்யுங்க. மாத்திரை மருந்து போடுங்க. கடைசி வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாம நீங்க நிம்மதியாக வாழலாம்” என்று மருத்துவர் சொல்ல

” என்ன சார் சொல்றீங்க? இந்த வயசுலயே எனக்கு சுகர் வந்துருச்சா? மறுபடியும் கேட்டான்.

“நீங்க எத்தனை தடவை கேட்டாலும் உங்க ரத்தத்துல சுகர் கலந்திருக்கு. நீங்க சரியான மருத்துவம், உணவு எடுக்கலைன்னா கூடிக்கிட்டே வரும்” என்று பயமுறுத்தினார் மருத்துவர்

” அய்யய்யோ எனக்கு சுகர் வந்துருச்சு. என்ன பண்றது? இதுக்கப்புறம் நம்ம வாழ்க்கை மாத்திரை மருந்துல தான் கழிய போகுதா? ” என்று வருத்தப்பட்டான் உதய்.

வீட்டில் நடந்ததை சொன்னான்.

” பரவாயில்லைங்க இந்த உலகத்தில இருக்கிற முக்கால்வாசி பேரு சுகரோட தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. வார்த்தையிலயும் வாழ்க்கையிலயும் இனிப்பு சேக்காதவங்களுக்கு கூட கடவுள் நோயை அனுப்பி வைத்திருக்கிறான். இது பெரிய விஷயம் இல்லங்க ” என்று மனைவி தத்துவம் சொன்னாள்.

” என்ன சொல்ற ? “

“ஆமா இங்க இருக்கக்கூடிய நிறைய பேர் சுகர் பிரஷரோட தான் வாழ்ந்துட்டு இருக்காங்க அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க” என்று உதயைத் திட்டினாள், அவன் மனைவி .

“சரி ஓகே நடந்தது நடந்து போச்சு சுகர் வந்தது வந்துருச்சு. இனி வாழ்க்கைய ஓட்ட வேண்டியது தான் “

என்று அன்றிலிருந்து அவனுக்கு எதை சாப்பிட்டாலும் பதட்டமாகவே இருந்தது. நமக்கு சுகர் கூடி விடுமோ? பிரஷர் வந்து விடுமோ ? தலை மயக்கம் வந்து கீழே விழுந்து விடுவோமோ? “

என்று எப்பவும் பயந்து கொண்டே இருந்தான். எந்த உணவைச் சாப்பிட போனாலும் இதில் சுகர் இருக்கிறதா? இதை சாப்பிட்டால் சுகர் வருமா ?

என்று ஐயப்பாட்டோடு கேட்டுவிட்டுத் தான் சாப்பிடுவான். அதனால் உதய்யைப் பார்ப்பவர்கள் எல்லாம் தெறிக்க ஓடினார்கள்.

இரவு, பகல் என்று எந்த நேரமும் அவன் மனதுக்குள் சுகரே சுவர் கட்டி இருந்தது.

“இதெல்லாம் தப்புங்க. இப்படி எல்லாம் செஞ்சீங்கன்னா. உங்களுக்கு சுகரும் போகாது. இன்னொரு நோயும் சேந்து வந்துரும் . இது தப்பு ” என்று மனைவியும் சுற்றி இருப்பவர்களும் உதய்யைப் பயமுறுத்தினார்கள்.

இந்த சுகரை விரட்டியாக வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டான்

“நீங்களே வீட்ல சுகர் பார்த்துக்கலாம் அதுக்கெல்லாம் இப்ப ஈஸியா மிஷின் இருக்கு “

என்று மருத்துவர் சொன்னதைக் கேட்டு, சுகர் பார்க்கும் மிஷினை வீட்டில் வாங்கி வைத்தான்.

” சாப்பிடும் போது ,சாப்பிடுவதற்கு முன்னால், சாப்பிட்ட பிறகு என்று எப்போதும் சுகர் பார்ப்பான் சாப்பிடுவதற்கு முன்னால் இருக்கும் சுகர், சாப்பிட்டதற்கு பின்னால் சுகர் ஏறி இருக்கும். சுகர் இப்படி ஏறிப் போச்சே ” என்று புலம்புவான்.

இப்படிக் காலை, மாலை என்று சுகர் பார்க்கும் மெஷினில் சுகர் அளவை பார்த்து பார்த்து மயங்குவான். அதை ஸ்கிரீன்ஷாட் கூட எடுத்து வைத்துக் கொள்வான்.

சாப்பிடுவதற்கு முன் இருக்கும் அவனது முகம் சாப்பிட்ட பின் ஏறியிருக்கும் சுகரைப் பார்த்து அவனுக்கு பைத்தியமே பிடித்து விடும். அந்த அளவிற்கு சுகரின் மீதான அக்கறை எடுத்துக் கொண்டான்.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மனைவி “ஏங்க உங்களுக்கு சுகர் இருக்கு. அதுக்காக அரை மணி நேரத்துக்கு ஒரு தடவ சுகர் பார்த்துகிட்டே இருந்தா என்ன அர்த்தம்? ஒரு மாசத்துக்கு ஒரு தடவை பார்க்கலாம். இரண்டு மாசத்துக்கு ஒரு தட பார்க்கலாம். அது இல்லாம இப்படி சும்மா பாத்திட்டே இருந்தா என்ன அர்த்தம் ? இது தப்புங்க ” என்று உதய்யைத் திட்டினாள்,அவன் மனைவி .

“இல்ல அடிக்கடி சுகரப் பார்த்துட்டு சாப்பிடுறது தான் நல்லது. இந்த சுகர அடியோட விரட்டணும். அதுக்கு தான் தெனமும் ஒரு நாளைக்கு பத்து தடவை சுகர் பார்த்திட்டு இருக்கேன்”

உதய் சொல்ல, சுகர் பார்க்கும் மெஷினை ஒளித்து வைத்தாள், மனைவி

” எனக்கு மிஷின் வேணும். நான் சுகர் பாக்கணும் ” என்று பைத்தியம் போல அலறினான், உதய்.

நடுநிசியில் ஏதோ சத்தம் கேட்டது. அவனால் அதை நம்ப முடியவில்லை

” என்ன ரேகா என்ன செஞ்சுகிட்டு இருக்க? ” என்று கொஞ்சம் கரிசனையோடு ரேகாவிடம் சென்றான்.

” அட போய்யா, உனக்கு சுகர் வந்துச்சோ இல்லையோ? உன்னைய கண்காணிச்சு கண்காணிச்சு, நான் சரியா தூங்காம, சரியா சாப்பிடாம உன்னை கண்காணிக்கிற பிரச்சனையில, இப்ப எனக்கு சுகர் வந்துருச்சு”

என்று பதற்றத்தோடு சொன்னாள், ரேகா. அவள் சொல்வதைக் கேட்டு விக்கித்து நின்றான் உதய்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *