செய்திகள்

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 27 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

Makkal Kural Official

சீர்காழி, செப். 18–

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 27 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அரசு மருத்துவமனையில் தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர்கள் ஊசி போட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு திடீரென நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமை டாக்டர், மகப்பேறு டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த டாக்டர்கள் கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்தனர்.அதைத்தொடர்ந்து அவர்களுக்கு உடல்நிலை சீரானது. இவர்களில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் அருண்ராஜ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் 16 கர்ப்பிணிகள், 11 குழந்தை பெற்ற தாய்ய்மார்களுக்கு ஆண்டிபயாடிக் ஊசி வழக்கம் போல் போடப்பட்டது. அப்போது திடீரென அவர்களுக்கு நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் சீரான இயல்பு நிலைக்கு திரும்பினர். எனவே அவர்களுக்கு போடப்பட்ட மருந்து மற்றும் ஊசி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பிறகு சரியான காரணம் தெரியவரும்’’ என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *