திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் பேச்சு
சென்னை, டிச. 7–
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் கோவை செல்வராஜ் இன்று திமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ் கூறியதாவது:–
1971ல் 14 வயதில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றிருக்கிறேன். இவ்வளவு நாட்கள் கழித்து தாய்க் கழகத்தில் இணைந்து செயல்பட வாய்ப்பளித்ததற்கு என்னுடைய நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி என்ற சுனாமி, தமிழ்நாட்டு மக்களை அழிவுப் பாதைக்கு அழைத்து சென்றது. சீரழிந்த தமிழகத்தை சீர்செய்து மக்களுக்கான ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.
திமுகவின் நலத்திட்டங்கள்
சமூக நீதியின் காவலர் முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி செயல்பட வந்திருக்கிறோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிமுகவிற்கு வக்காளத்து வாங்கி பேசியதற்கு, மக்களிடம் நான் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்றைய ஆட்சியில் பெண்கள், மாணவ, மாணவிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் ஒரு வரப்பிரசாதம்.
வர்த்தகர்கள் எந்தவித பாதிப்பிற்கும் ஆளாகாமலும் தரகர்கள் பிரச்சினையின்றியும் செயல்பட முடிகிறது. அவர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி சிறப்பித்து கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின்சாரம் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒன்றரை விவசாயிகள் இலவச மின்சாரம் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
எடப்பாடிக்கு தகுதி கிடையாது
இவ்வாறு விவசாயிகள் வாழ்வில் முதலமைச்சரும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஒளிவிளக்கை ஏற்றி வைத்திருக்கிறார்கள். மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தால் பலர் பயன்பெறுகிறார்கள். பெண்களின் வாழ்வில் விளக்கேற்றும் நல்ல திட்டம். இத்தகைய நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது.
அதிமுக என்ற கட்சி தற்போது கம்பெனி ஆகி விட்டது. எனவே உண்மையான அதிமுகவினர் அனைவரும் திராவிட ஆட்சியை நிலைநாட்டிட முதல்வரின் பாதையில் நடைபோட வேண்டும். வேறோடு சாதிக் கட்சியை ஒழிக்க வேண்டும். வேறோடு மதவாதக் கட்சியை ஒழிக்க வேண்டும். கோவை மாவட்டத்தை சேர்ந்த என்னுடைய ஆதரவாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் விரைவில் திமுகவில் இணையவுள்ளோம். முதலமைச்சர் நேரம் கொடுத்ததும் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும்.
கோவை மாவட்டம் என்றால் திமுகவின் கோட்டை என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து நாங்களும் களப்பணியாற்றுவோம் என்று கூறினார். திமுகவில் இணைந்ததற்கான காரணம் பற்றி கேள்வி எழுப்புகையில், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி திமுகவில் இணைந்துள்ளேன் என கோவை செல்வராஜ் கூறினார்.