செய்திகள்

சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்திய டிரம்ப்

Makkal Kural Official

வாஷிங்டன், ஏப். 11–

அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.

டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. சீனாவுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது.

இதனால் சீனா, ஏற்கனவே அறிவித்த 34 சதவீதம் வரியுடன் 50 சதவீதத்தை சேர்த்து ஒரே நேரத்தில் 84 சதவீத வரியை அறிவித்தது. இதையடுத்து கடும் கோபம் அடைந்த, அதிபர் டிரம்ப் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி 125 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

தற்போது, சீனா மீது 20 சதவீதம் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்து உள்ளார். இதனால், மொத்த வரி இப்போது 145% ஆக உயர்ந்துள்ளது. சீனப் பொருட்களுக்கான வரிகளை 145 சதவீதமாக கடுமையாக உயர்த்துவதன் மூலம், சீனாவுடனான தற்போதைய வர்த்தகப் போரை அதிபர் டிரம்ப் தீவிரப்படுத்தி இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ”நாடு இயங்கும் விதத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உலகம் எங்களை நியாயமாக நடத்த வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கிறோம்,’ என்று டிரம்ப் கூறினார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 145 சதவீத வரியும், அமெரிக்கா–மெக்சிகோ–கனடா ஒப்பந்தத்தின் கீழ் வராத அலுமினியம், ஆட்டோமொபைல்கள் மற்றும் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், மற்ற அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் தங்களது வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்காத நாடுகளுக்கு, 90 நாட்கள் வரை வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக டிரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *