ஜெனிவா, டிச.22–
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இதுதொடர்பாக கவலை தெரிவித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரயஸ், சீனா தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:–
உலகில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. தற்போது சில நாடுகளில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. சீனாவில் உள்ள நிலைமை கவலையளிக்கிறது. சீனாவின் கொரோனா பாதிப்பு பற்றிய விபரங்களை பகிர்ந்து ஆய்வுகள் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது” என்றார்.
அமெரிக்காவில்…
உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது.
அங்கு கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்து விட்டது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே 7 ஆயிரத்து 330 ஆகும்.
இந்தத் தொற்றால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தை எட்டுகிறது. அங்கு இதுவரை சரியாக 10 லட்சத்து 88 ஆயிரத்து 280 பேர் இறந்துள்ளனர்.