நியூயார்க், பிப். 3–
சீனாவின் அடாவடித்தனத்தை சகித்து கொள்ள முடியாது என அமெரிக்க குடியரசு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா–சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அதேபோல் தைவானையும் தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிறது. ஆனால் சுதந்திரமான தனி நாடு என தைவான் கூறுவதால், ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சீனா மிரட்டி வருகிறது. அதனால் அமெரிக்காவின் உதவியை நாடிய தைவானுக்கு, ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதேபோல் தென் சீனக்கடல் பகுதி மொத்தத்தையும் தனக்குறியதாக சீனா கூறி வருவதால் உலகநாடுகள் அதிருப்தியில் உள்ளன.
அடாவடியை ஏற்கமுடியாது
சீனாவின் இத்தகைய அடவாடிப்போக்குகளை கண்டிக்க அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் சீனாவின் மோசமான மனித உரிமை மீறல்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அதன் கூட்டாளிகள் மற்றும் இந்தியா, தைவான் மீதான ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்குப் சீனாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் பிப்ரவரி 5ம் தேதி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். சீனாவின் அடாவடித்தனத்தை இனி மேலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அடிப்படை உரிமை மீறல்களுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.