செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த திட்டம்

Makkal Kural Official

விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

புதுடெல்லி, பிப்.20-

மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் நேற்று முன்தினம் உயர்நிலைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ., கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2026–2027ம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.

உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது. அதாவது தற்போது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதனை ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

2 முறை நடக்கும் இந்த தேர்வுகள், அதன் முடிவுகள் மாணவர்களுக்கு இளங்கலை படிப்பில் சேர்வதற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் திட்டமிடப்பட வேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இந்த திட்டம் குறித்து கல்வியாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கருத்துகள் பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த மாற்றம், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த வாய்ப்பு வழங்குவதை நோக்கமாக கொண்டது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *