செய்திகள்

சிறுமிகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக வினர் போராட்டம்

Makkal Kural Official

சென்னை, பிப்.19-–

சிறுமிகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில், கண்களில் கருப்புத்துணி கட்டி அண்ணா தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பள்ளி -கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, அண்ணா தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமை தாங்கினார். இதில் மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், விருகை ரவி, ஆதிராஜாராம், ராஜேஷ், பாலகங்கா, கே.பி.கந்தன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், இணை செயலாளர் டி.சிவராஜ், முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்தன் உள்ளிட்ட மாநில- மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுக்காமல், தி.மு.க. அரசு கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம்சாட்டி, அண்ணா தி.மு.க.வினர் கண்களில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எழுப்பினர்.

அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:-–

தமிழ்நாட்டில் 4 வயது முதல் 60 வயது வரை பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை சொல்ல முடியுமா? பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்புக்கு செல்லும் பெண் போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை.

இப்படி இருந்தால் போலீஸ் துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? ஜெயலலிதா ஆட்சியில் போலீஸ் துறை எப்படி இருந்தது? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் போலீஸ் துறை எப்படி இருந்தது? அண்ணா தி.மு.க. ஆட்சியில்தான் போலீஸ் துறை வலிமையாக, சுதந்திரமாக இருந்தது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள், வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.

இவ்வாறு வளர்மதி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *