செய்திகள்

சிறுகதை … வினோதம்…! … ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அந்தக் கோயிலில் பார்த்த நிகழ்வு செந்தமிழனை என்னவோ செய்தது!

கோயிலில் இருப்பவர்களை விட கோயிலுக்கு வெளியே இருந்த செருப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன.

“வெளியில நூத்துக்கணக்கான செருப்புகள் கிடக்குது .ஆனா கோயிலுக்குள்ள இருக்கிறவங்களோட எண்ணிக்கை குறைவா இருக்கே ? இந்தச் செருப்புகளுக்கான ஆட்கள் யாரு? எதுக்காக இவ்வளவு செருப்ப போட்டு இருக்காங்க. ஒருவேளை இந்தப் பெரியவர் செருப்பு வியாபாரம் பண்றாரா ?

என்று குழம்பிப் போய் நின்றவன் அவர் அருகே போய்,

” ஐயா ,இந்த இடத்துல என் செருப்பப் போடலாமா?

“தாராளமா போட்டுக்கோங்க தம்பி. “

“இதுக்கு கட்டணம் எதுவும் சார்ஜ் பண்றீங்களா? என்று செந்தமிழன் கேட்க

“நான் அதெல்லாம் யார்ட்டயும் கேக்குறதில்ல. அவங்களா கொடுத்தா வாங்கிக்கிறேன். இல்ல விட்டுருவேன். இத ஒரு சேவையா தான் பண்ணிட்டு இருக்கேன் தம்பி. காலையில இங்க வந்து உட்கார்ந்தேன்னா. கோயிலப் பூட்டிட்டுப் போறது வரைக்கும் இங்க தான் இருப்பேன் .இதை நான் தெய்வத்துக்கு செய்ற தொண்டா தான் நினைக்கிறேன்” என்று சொன்னார் அந்தப் பெரியவர்

” ஐயா ஒன்னு கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. இங்க நூத்துக்கணக்கான செருப்புகள் வெளியில் இருக்கு. ஆனா கோயில்ல அவ்வளவு ஆட்கள் இருக்கிற மாதிரி தெரியலையே? என்று சந்தேகமா செந்தமிழன் கேட்க ,சிரித்துக் கொண்ட அந்தப் பெரியவர் “தம்பி இந்தக் கோயிலுக்கு நீங்க புதுசா வர்றீங்களா?”

” ஆமாய்யா .. “

“. அதுதான் உங்களுக்கு தெரியல. சரி போய் சாமி கும்பிட்டு வாங்க . நான் உங்களுக்கு சொல்றேன்”

என்று அந்தப் பெரியவர்.அங்கங்கே ஜோடி சேராமல் கிடந்த செருப்புகளைச் சரியாகச் சேர்த்து வைத்தார்.

ஒரு சில தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றான் செந்தமிழன்.

” இதுல நம்ம செருப்பு எங்க இருக்கு? என்று ஒரு முறைக்கு பல முறை சோதனை இட்டுக் கொண்டான். தன் செருப்பு இருக்கும் அடையாளத்தையும் தன் மனதுக்குள்ளே வைத்துக் கொண்டான்.

” இந்த இடத்தில தான் நம்ம செருப்பு இருக்கு. இந்தச் செருப்பு பக்கத்துல நம்ம செருப்பு இருக்கு “

என்று ஊர்ஜிதப்படுத்திய பிறகு செந்தமிழன் கோயிலுக்குள் நுழைந்தான். சில ஆட்கள் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சாமி கும்பிட்டு வெளியே வரும்போது, அடுக்கி வைக்கப்பட்டிருந்த செருப்புகளில் அவர்களுக்கு தேவையான செருப்புகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

” என்ன இது? அவங்க செருப்பு ,எந்த இடத்தில வச்சாங்கன்னு அவங்களுக்கு தெரியாதா ?இதை ஏன் இப்படி தேடிக்கிட்டு இருக்கணும் ?

என்று நினைத்துக் கொண்டே வந்த செந்தமிழனின் செருப்பை ஒருவர் தன் காலில் மாட்டிக் கொண்டிருந்தார்

“ஹலோ சார்… ஹலோ …அது என் செருப்பு “

“உங்க செருப்பு தான்னு எனக்கு தெரியும். உங்களுக்கு தேவையான செருப்புகள நீங்க எடுத்துக்கங்க “

என்று சொன்னவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான் செந்தமிழன் .

இதைப் பார்த்த அந்தப் பெரியவர்

” தம்பி கொஞ்சம் பொறுமையா இருங்க. உங்க செருப்பு தான் எனக்கும் தெரியும். விட்ருங்க அவர் போடட்டும் ” என்று அந்தப் பெரியவர் சொல்ல

” ஐயா இது என் செருப்புய்யா. அதைப் போட்டுக்கிட்டு இருக்காங்க. கேக்க வேண்டாம்னு சொல்றீங்களே?

என்று செந்தமிழன் கேட்க .

” தம்பி உங்களுடைய பிரச்சனை இன்னைக்கே தீர்ந்து போச்சுன்னு நெனச்சுக்கங்க . “

“என்னய்யா சொல்றீங்க, ? “

என்று வியப்பாகக் கேட்டான் செந்தமிழன்

” ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பிரார்த்தனை, ஐதீகம் இருக்கு. இந்தக் கோயில்ல , இருக்கக்கூடிய பிரார்த்தனை வேண்டுதல் என்னன்னா இங்க வர்றவங்க அவங்க செருப்ப இங்க அவுத்து விட்டுட்டுப் போயிரணும். பிறகு உண்மையிலேயே உங்க செருப்பு உங்க கிட்ட வந்துச்சுன்னா உங்களுக்கு எந்த பிரச்சனையும் தீரலன்னு அர்த்தம்.

உங்க செருப்ப இன்னொருத்தவங்க போட்டு போறாங்கன்னா உங்களுடைய பிரச்சனை வேறொருத்தவங்களுக்கு போயி கடவுள் தீர்க்க போறார் அப்படின்னு அர்த்தம். அதனால உங்களுடைய செருப்பை வேறொருத்தவங்க போட்டுட்டுப் போறாங்கன்னா உங்களுக்கான பிரச்சினை விலகு துன்னு அர்த்தம்.. நீங்க உங்களுக்கு தேவையான செருப்ப போட்டுட்டுப் போகலாம் .இது திருட்டு இல்ல .மூடநம்பிக்கையும் இல்ல . இது இந்தக் கோயிலோட வேண்டுதல், ஐதீகம்” என்று அந்தப் பெரியவர் சொல்ல செந்தமிழனுக்கு குழப்பமானது.

” நம்மோட செருப்பு அளவு நம்பர் எட்டு. இதில எட்டாம் நம்பர் செருப்ப எப்படி தேடுறது? அதுவும் இல்லாம யார் யார் போட்ட செருப்ப நாம போடணுமா? என்று குழம்பி நின்றான் செந்தமிழன் .

“தம்பி நீங்க உங்களுக்கு தேவையான செருப்ப கால்ல மாட்டிட்டு போலாம். போய் தேடுங்க”

என்று அந்தப் பெரியவர் சொல்ல

குவிந்து கிடந்த அந்தச் செருப்புகளில் தனக்குத் தேவையான செருப்பைத் தேடினான், செந்தமிழன். அந்த கோயிலுக்கு வந்து கொண்டிருந்த சிலரும் தங்கள் செருப்புகளை மாற்றி போட்டு அவர்களுக்கு தேவையான செருப்புகளை தேடிக் கொண்டிருந்தார்கள். தனக்கான செருப்பைத் தேடித் தேடிப் பார்த்தான் செந்தமிழன் .

” தம்பி ரொம்ப சந்தோசம். உங்க பிரச்சனை இன்னைக்கோட எதுவுமே இல்லாம போச்சு. இனிமே உங்களுக்கு எந்த பிரச்சனையும் கடவுள் கொடுக்க மாட்டார். தைரியமா போங்க . உங்களுடைய வேண்டுதல் கண்டிப்பா நிறைவேறும் “

என்று அந்தப் பெரியவர் சொன்னார்

” ஐயா, ஏன் இப்படி சொல்றீங்க? என்று செந்தமிழன் கேட்க

“தம்பி திருநள்ளார்ல நம்ம போட்டு இருக்கிற உடைகளோட குளிச்சிட்டு அந்த உடைகளை ஆத்தோட அப்படியே விட்டுட்டு வரணும். அப்படிங்கறதுதான் அந்தக் கோயில் ஐதீகம். செருப்ப விட்டுட்டு அவங்களுக்கு தேவையான செருப்பப் போட்டுட்டு போறது அப்படிங்கறது தான் இந்தக் கோயில் ஐதீகம். இப்ப உங்க பிரச்சினை மொத்தமா தீந்திருச்சு” சந்தோஷமாக போங்க என்று சொன்னார், பெரியவர்

செருப்புகள் எதுவும் அணியாமல் வெறுங்காலில் நடந்து சென்று கொண்டிருந்தான் செந்தமிழன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *