அந்த ஊரில் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதாக ஊர் மக்கள் எல்லாம் அன்று ஒன்று கூடினார்கள். நல்ல காரியம் செய்யணும். மாலை. மரியாதை, கொட்டு மேளம் முழங்க இந்த இழப்பை நாம சரி செய்யணும். இத்தனை ஆண்டு காலம் தாயாய் பிள்ளையாய் தாயின் மடியாய் உறவாய் உன்னதமாய் இருந்தது இப்ப நம்ம கைவிட்டுப் போயிருச்சு”
என்று நினைத்து அத்தனை பேரும் தேம்பித் தேம்பி அமுதார்கள். எல்லோர் கண்களிலும் கண்ணீர் நிரம்பி வழிந்தது .
“இப்படி ஆகும்னு நினைச்சுக் கூட பாக்கல. ஆகிப்போச்சு. என்ன செய்யலாம்? இனி திரும்ப வராது. தப்பு நடந்து போச்சு. நாமதான் மனசத் தேத்திக்கணும். போச்சேன்னு உட்கார்ந்தோம்னா இங்க எதுவும் நடக்காது”
என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள். ஒவ்வொருவர் கையிலும் மெழுகுவர்த்தி, அகர்பத்தி, மாலைகள் இருந்தன. அத்தனை பேரின் கண்களிலும் சோகம் ததும்பிக் கிடந்தது.
“இனி கவலைப்பட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. புதைக்கலாமா? எரிக்கலாமா?”
என்று ஒருவர் கேட்க
“இல்லங்க எரிக்க வேண்டாம். புதைக்கச் சொல்லலாம்”
“அதுவும் சரிதான்,, எரிச்சம்னா அதனுடைய உடம்பு ரொம்ப காயப்படும். சூடு வலி தாங்காது. அதனால புதைக்கிறது தான் சரி. யார் யார் என்ன செய்யணுமோ அந்தச் சம்பிரதாயங்களச் செஞ்சிருங்க “
என்று ஒரு பெரியவர் சொல்ல கண்ணீர் மல்கிய கண்களோடு ஆட்கள் கொண்டு வந்திருந்த மாலைகளைப் போட்டார்கள். அகர்பத்தி ,மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து முழங்காலிட்டு கண்ணீரோடு வேண்டினார்கள்.
” இனி ஒரு தடவ இங்க நீ இருக்கப்போறதில்ல. இந்த எடத்தில உன்ன நாங்க பாக்க போறதில்ல. இவ்வளவு நாள் எங்க கூடயே இருந்த . இப்ப எங்கள விட்டுட்டுப் போற ? போய் வா “
என்று அழுதபடியே கடைசிக் காரியத்தை நிறைவேற்றினார்கள், மக்கள்.
குழி தோண்டப்பட்டது. அவ்வளவு பெரிய குழியை அதுவரையில் யாரும் பார்த்ததில்லை .
“ஆறடிதான் மனிதர்களுக்குச் சொந்தம்.ஆனா மனிதர்களைக் காத்த இந்த ஆலமரத்துக்கு இந்த மண்ணே சொந்தம் ” என்று அங்கிருந்த ஒருவர் சொல்ல, புயலில் சாய்ந்து கிடந்த, நூறு ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நின்று கொண்டிருந்த, மக்களோடு மக்களாக வாழ்ந்த அந்த ஆலமரத்திற்கு மாலையிட்டு, பூ, பொட்டு ,சந்தனம் தெளித்து தங்கள் உறவாக நினைத்த அந்த மரத்தைப் புதைக்க ஆயத்தமானார்கள் மக்கள் .
” மனுசங்க இறந்தா மரத்த வச்சுத்தான் எரிப்பாங்க. ஆனா, ஒரு மரமே மரணம் அடைஞ்சா எதை வச்சு எரிக்கிறது? அதனாலதான் இந்த மரத்த நாம புதைக்கிறோம். மறுபடியும் இந்த மண்ணுல இதே மரமா நீ முளைச்சு வந்து இந்த மக்களைக் காப்பாத்தணும்”
என்று குழி தோண்டிய இடத்தில் அந்த மரத்தைப் புதைத்து மண் மூடினார்கள். மண்மூடிப் புதைத்த அந்த இடத்தில்,சின்ன ஆலமரக் கன்றை நட்டு வைத்தான், ஒரு சிறுவன்.
அத்தனை பேரும் அந்தக் கன்றை வணங்கினார்கள். இறந்த ஆல மரம், இப்போதுதான் பிறந்த மரமாக அத்தனை மக்களுக்கும் தெரிந்தது. முட்டி மோதிக் கண்டிப்பா நீ முளைச்சு வந்திருவ’ என்றார் ஒரு பெரியவர். ஆலமரம் புதைத்த இடத்தில், நம்பிக்கையாய் நின்றது சிறு ஆலமரக்கன்று.