சிறுகதை

சிறுகதை … நடத்துனர் …! … ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

வீட்டை விட்டுத் தாண்டாத சுகுணா இன்று ஊரெல்லாம் சுற்றி வருகிறார். மற்றவர்களின் சுண்டு விரல் கூட படாதவளின் தேகம் இப்போது கூட்டத்திற்கு ஊடே உரசித் தட்டுத் தடுமாறி வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

காலையில் பேருந்தில் ஏறுபவள் இரவில் தான் இறங்குகிறாள். அங்கும் இங்கும் அலை பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கும் அவளது கால்கள் இப்போது ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கின்றன. வெப்பத்தை தாங்க முடியாத அவளது மெல்லிய தேகம் இப்போது தணலில் உறைந்து கிடக்கிறது .ஆண்களிடம் பேசுவதற்கே அச்சப்படும் அவளது நாணம் இப்போது ஒவ்வொருவரிடமும் கையேந்தி காசு வாங்கிப் பயணச் சீட்டுக் கொடுக்கிறது .அழகழகாய் உடை உடுத்தும் அவனது தேகம் இப்போது சீருடை அணிந்திருக்கிறது. யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காகவே மறைந்து மறைந்து வாழ்ந்திருந்தவளை இப்போது ஊரே பார்க்கிறது.

” என்ன செய்ய ? வாழ்க்கை மனிதர்களைச் சில சங்கடங்களுக்கு உள்ளாக்குகிறது .சுகுணாவிற்கும் அப்படித்தான். இன்று அவள் நடத்துனர். பேருந்து ஏறி காலையிலிருந்து இரவு வரை பணி செய்யும் பெண் நடத்துனர் . இந்தப் பனிச்சுமை, வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்காகத் தான் ” என்று வற்புறுத்தாமலே அவள் பணிக்குச் சென்றாள்.

தொடுவதற்கென்றே கை நீட்டும் சில ஆண்கள். உரசுதற்கென்றே வரும் சில காமக் கழுதைகள். இப்படி எத்தனை மனிதர்களை நான் கடந்து வர வேண்டும். மது அருந்தி வருபவன். போதையில் இருப்பவன். நிறையப் பேசுபவன் . பாக்குப் போட்டு நிற்பவன் “

என்று எத்தனை மனிதர்களை நான் சமாளிக்க வேண்டியிருக்கிறது .அந்தக் கூட்டத்திற்குள் பிதுங்கி நெளிந்து வெளியே விழும்போது இந்தப் பணி நமக்கு தேவைதானா? இந்த சம்பளம் நமக்கு அவசியம் தானா? இதை வைத்துத்தான் நமக்கு வாழ்க்கை நடத்த

வேண்டுமா ?”

என்று எவ்வளவு வருத்தம் மேலிடுகிறது. மாதவிடாய் காலங்களில் நான் படும் அவஸ்தைக்கு அளவே இல்லையே? திடீரென்று அவசரம் என்றால் எங்கே நான் ஒதுங்குவது . ஆண்கள் என்றால் ஓடிப் போய் வந்து விடுவார்கள். பெண்கள் அப்படி இல்லையே? இந்த அவஸ்தை யாருக்கு புரியும் .நொந்து கொண்டாள் சுகுணா.

வழக்கம் போல அன்றும் பேருந்தில்

டிக்கெட் … டிக்கெட் …. என்று அவளின் மென்மைப் பேச்சு சிலருக்கு பிடித்திருந்தது.

“இந்தப் பொம்பள கண்டக்டர். ரொம்ப நல்லா இருக்கால்ல .தினந்தோறும் இந்த வண்டில தான் ஏறணும்”

என்று காமக் குரலில் பேசும் கயவர்களிடம் தப்பித்து பயணச்சீட்டு கொடுத்து ஒதுங்க வேண்டும். யாரும் உரசினாலும் தொட்டாலும் கேள்வி கேட்க முடியாத.

“கூட்டத்தில என்ன பண்றது? நீங்கதான் பாக்குறீங்கல்ல. எப்படி உரசாம போறது “

என்று பல்லிளிக்கும் மனிதர்களிடம் என்ன நியாயம் பேசுவது ? எல்லாம் அவஸ்தை தான்.

” இந்த வேலை. இந்தப் பணி வாழ்வை ஓட்டுவதற்கு இல்லை என்றால் இதற்கு வந்திருக்கவே மாட்டேன்”

என்று தனக்குத்தானே அழுது கொண்டாள் சுகுணா

“டிக்கெட் கொடுங்க”

என்று முதியோர் இருக்கையில் அமர்ந்திருக்கிறவனை ஒன்றும் சொல்ல முடியாது. பெண்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டு பிரச்சனை செய்கிறவனை எழுப்பி விட முடியாது. எல்லாம் சட்டம் படித்த மனிதர்கள் . இந்தப் பேருந்து பயண வழித்தடங்கள் எல்லாம் வழி மாறாமல் தான் சென்று கொண்டிருக்கின்றன. என் வாழ்க்கைத் தடம் தான் திசை மாறி நிற்கிறது. பேருந்து பயணம் தினமும் போகிறது. பேருந்து பயணம் நம் திசை தான் தெரியவில்லை ” என்ற வருத்தத்தோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறாள் சுகுணா .

“இந்தப் பயணம் எவ்வளவு தூரம் என்பது தெரியவில்லை. பொருளாதாரம் மிகுந்திருந்தால் பணியை நிறைவு செய்யலாம். அப்படி இல்லையே? இந்த இடிபாடுகளுக்கு இடையே தான் இந்த வாழ்க்கைப் பயணமும். பேருந்து பயணமும் நொந்து கொண்டே பயணப்பட்டாள் சுகுணா. அவளின் முதுகில் ஒரு காமுகன் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்

” அவனை என்ன சொல்லித் திட்டுவது? கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. அவனுக்கு அது வசதி. சுகம். எனக்குத்தான் அவஸ்தை. பேருந்து போய்க் கொண்டிருக்கிறது .

சுகுணாவின் மனது ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது.

Loading

One Reply to “சிறுகதை … நடத்துனர் …! … ராஜா செல்லமுத்து

  1. பெண் நடத்துனரின் உண்மையான கதை. வாழ்க வாழ்க வாழ்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *