கதைகள் சிறுகதை செய்திகள்

தவறு தவறல்ல..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

கவிதா ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தாலும்,அவளுடைய எழுத்துக்களை அச்சில் பார்க்க வேண்டும் .அதுவும் ஒரு புத்தகமாக மொத்தமாக வெளியிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் வேர்விட்டு இருந்தது. ஆனால் அதற்கான சூழல் கை கூடவே இல்லை.

” என்ன செய்வது?”

என்று யோசித்தாள். பதிப்பகத்தின் மூலமாகப் புத்தகத்தைக் கொடுத்து புத்தகம் போட வேண்டும் என்றால் நாம் பணம் கொடுக்க வேண்டும்.

” இது என்ன தலைகீழ் ? நாமே கதையை எழுதி நம் கதையை புத்தகமாக அடித்து வெளியிட பதிப்பகத்திற்கு நாம் ஏன் பணம் தர வேண்டும் ? அதுவும் நம் எழுத்துக்களை வாங்கி அவர்கள் புத்தகம் போட்டு விற்பதற்கு நாம் பணம் கொடுக்க வேண்டுமா? பெரும் விந்தையாக இருக்கிறதே ? ” என்று அந்த எண்ணத்தை தள்ளிப் போட்டாள்.

” பணம் கொடுப்பது ஒன்றும் அவளுக்கு பெரிய விஷயம் இல்லை தான். ஆனால் இது, நம் தலை மீதே மிளகாய் அரைக்கும் விஷயம் என்பது அவளுக்குப் பிடிக்கவில்லை” என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பாள்.

“இங்க பாரு கவிதா, நீ பிரபலமில்லாத எழுத்தாளர். உன்ன நம்பி யாரும் பணத்தை இன்வெஸ்ட் பண்ண மாட்டாங்க. அதனால முதன்முதலா புத்தகம் அடிக்கணும்னா நீ தான் பணம் கொடுக்கணும் .அப்படின்னா மட்டும்தான் உன்னுடைய புத்தகம் வெளிய வரும் .இல்ல நீயே சொந்தமா புத்தகம் அடிக்க வேண்டியதுதான் “

என்று கவிதாவின் தோழி மாலதி சொல்ல

” சரி அப்படியே செஞ்சிட்டு போறேன். என்னுடைய பணத்தைப் போட்டு, நானே புத்தகம் அடிச்சுக்கிறேன். அது லாபமோ நஷ்டமோ என்னச் சார்ந்தது. ஆனா , வேற யாருக்கோ என்னுடைய எழுத்தையும் கொடுத்து பணத்தையும் கொடுத்து, எனக்கு பத்து புத்தகம் மட்டுமே கொடுத்துட்டு மிச்சப் புத்தகத்தை அவங்க வச்சு விக்கிறதுக்கும் நூலகத்துல கொடுக்கிறதுக்கும் நான் எதுக்கு அவங்களுக்கு பணம் கொடுத்து புத்தகம் அடிக்கணும் “

என்று விடாப்படியாக சொன்னாள் கவிதா

” சரி , அது உன் இஷ்டம் ” என்று மாலதி நழுவி விட, அடுத்த வாரமே புத்தகம் அடிப்பதற்கான வேலையைத் தொடங்கினாள், கவிதா. அட்டைப்படம், எழுத்துக்களின் அளவு என்று எல்லாம் தான் பதிப்பிக்கும் இடத்தில் சொல்லி நேர்த்தியாகப் புத்தகத்தை வடிவமைத்தாள், கவிதா.

” சரி இத இப்படியே விட்டுடக்கூடாது. இதற்கு ஒரு விழா வைக்கணும் அப்போ தான் , இது சரியாக இருக்கும் “

என்று நினைத்த கவிதா புத்தகம் வெளியிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள். குளிரூட்டப்பட்ட ஒரு அரங்கில் புத்தகம் வெளியிடுவதற்கு புக் செய்தாள்.. புத்தகத்தை வெளியிடுவதற்கும் வாங்குவதற்கும் பிரபலமானவர்களைத் தேடிப்பிடித்து புத்தகத்தை வெளியிடுவதற்கு முனைந்தாள் . தன் நண்பர்களுடன் சேர்ந்து புத்தகம் வெளியிட இசைந்தாள்

எல்லா எழுத்தாளர்களின் பெயர், புத்தகத்தின் பெயர் என்று எல்லாம் தயாராகிப் பத்திரிகை அடித்தாயிற்று. பத்திரிகையை எல்லோருக்கும் விநியோகம் செய்து கொண்டிருந்தாள்.

” என்ன கவிதா ? அவ்வளவு படிச்சிருக்க ? இவ்வளவு எழுதியிருக்க? உன்னுடைய பேரும் புத்தகத்தினுடைய தலைப்பும் தவறா இருக்கே? இத நீ பாக்கலையா ?

“இல்ல பாக்கலையே ? “

பதறினாள், கவிதா

“மறுபடியும் பாரு. ஏன் அது உனக்கு தெரியாமப் போச்சு? “

என்று மாலதி சொல்ல

“நான் சரியா தான் பாத்தேன். எனக்கு அப்படி ஒன்னும் தவறா தெரியலையே? உன்னோட புத்தகத்துக்கு தலைப்பு பெயர் என்ன ?”

“தாகம் “

” ம்…தாகம் அப்படின்னு தான இருக்கணும். ஆனா தகாம் ன்னு இருக்கு’’

” ஓ”

” அதையும் தாண்டி வெளியீட்டு விழா அப்படிங்கறதுக்கு பதிலா வெளியிட்டு விழா அப்படின்னு இருக்கு.

” அப்படியா? பதறினாள், கவிதா.

” இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுல இருக்கிற எல்லா ஆட்களை விடவும் உன்னுடைய பெயர் தான் கவனத்தில இருக்கும் “

” எப்படி? “

“இதை நீ எதிர்மறையா நினைக்காம நேர்மறை நினைச்சுக்க ” என்று அந்த மாலதி சொல்ல

” அது எப்படி ? ” என்று வியப்பாகக் கேட்டாள் கவிதா

” மற்ற எல்லா புத்தகமும் எல்லா பெயர்களும் போற போக்குல வாசிச்சிட்டு போய்டுவாங்க. ஆனா உன்னுடைய பேர இரண்டு தடவைக்கு மேல வாசிப்பாங்க. ஏன்னு தெரியுமா? ” இங்க நிறைய கண்டுபிடிக்கிறவங்கள விட குறைய கண்டுபிடிக்கிறவங்க தான் அதிகம். அது என்ன தாகம் அப்படின்றதுக்கு பதிலா தகாம் போட்டு இருக்கு. வெளியீட்டு விழாவுக்கு வெளியிட்டு விழான்னு இருக்குன்னு ஒன்னுக்கு ரெண்டு முறை வாசிப்பாங்க .உன் பேரும் அவங்களுக்கு மனப்பாடம் ஆகிடும் கவிதா இந்தத் தவறக் கூட உனக்கு ஒரு வாய்ப்பா நினைச்சுக்கோ ” என்று மாலதி சொல்ல, அதுவரையில்

” அச்சச்சோ தவறா போச்சே, இவ்வளவு படிச்சு, இவ்வளவு எழுதி நாம மிஸ்டேக் பண்ணிட்டோமே அப்படின்னு உடைஞ்சு போய் உட்காந்திருந்தேன். என்னுடைய கவலை இப்ப அழகா கரைஞ்சு போச்சு” என்று பெருமூச்சு விட்டாள், கவிதா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *