“நான் அப்படியெல்லாம் இல்ல. உங்களை மட்டும் தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். இது என் அம்மா மேல சத்தியம். என்ன நீங்க முழுசா நம்பலாம்”
என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள் மஞ்சு.
” உண்மையத் தான் சொல்றியா? “
என்று இதயம் ஈரமாக அழுகுரலில் கேட்டான் முரளி.
” சத்தியமா உங்கள மட்டும் தான் நான் நினைச்சுட்டு இருக்கேன். உங்களத் தவிர இந்த ஒலகத்தில எனக்கு யாருமே தெரியாது. நீங்க தான் என் உயிர். உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் “
என்று முரளியின் தலையில் அடித்துச் சத்தியம் செய்தாள் மஞ்சு.
முரளியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
” ஏய் ,என்ன சின்னப்புள்ள மாதிரி அழுதிட்டு இருக்கீங்க”
” ஒன்னும் இல்ல” வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தலையை மட்டுமே ஆட்டினான் முரளி
” நீங்க நெனைக்கிறது மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது. நீங்க என்னi முழுசா நம்பலாம். இந்த வானமே இடிஞ்சு விழுந்தாலும் இந்த பூமியே தலைகீழா ஒடைஞ்சாலும் உங்கள மட்டும் தான் எனக்கு பிடிக்கும் . உத்திரவாத வார்த்தைகளை உதிர்த்தாள் மஞ்சு.
அதற்கும் சரி… சரி… என்றே தலையாட்டினான் முரளி
அவனுக்குள் விதையாய் விழுந்தவள், இன்று ஆலமரமாய் நிமிர்ந்து நின்றாள்.
‘மஞ்சு நல்லவள் தானா ? இவளை நம்பலாமா? அவன் மனதிற்குள் கோடிப் பிரச்சனைகள் கொடி கட்டிப் பறந்தன.
நம்முடன் ஏதேதோ பேசினாள். அன்பில் நனைத்தாள். இதயம் தொட்டாள். இன்னதென்று தெரியாத ஒரு உலகத்திற்கு நம்மைக் கூட்டிச் சென்றாள். இன்று அவள் அன்பிலிருந்து வெளியே வர முடியாமல் திணறினான் முரளி.
ஆண்கள் எல்லாம் தவறுகள் செய்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மஞ்சுவை மட்டுமே நேசித்தான், நம்பினான் முரளி. அவளைத் தன் உயிராகவே நினைத்துக் கொண்டான். அவள் எது சொன்னாலும் தட்டாமல் செய்தான் .அவளின்றி ஒரு அணுவும் அசையாது
என்ற இடத்திற்கு தள்ளப்பட்டான் முரளி. எந்த வேலை செய்தாலும் அவளின் அனுமதியில்லாமல் அவன் செய்யத் தவறுவதில்லை; அவளை ஒரு காதலியாக , தாயாகவே நினைத்தான். இருவரும் ஒரே ஊரில் இருந்தாலும் தொலைவில் இருந்த மஞ்சுவை தொலைபேசி மூலமே தொடர்பு கொண்டான் முரளி.
அவளின் குரல் கேட்டால் அவனுக்கு அத்தனையும் பறந்து போகும். மஞ்சு நல்ல பெண். ஒழுக்கமானவள் என்று தனக்குள்ளே வரிந்து கொண்டான்.
ஒருநாள் போன் செய்தான்.
“ஹலோ “
” வணக்கம். என்ன பண்றிங்க?”
அவள் பேசும் போது ஊடே ஒரு குரல் கேட்டது. அவள் யாருக்கோ பதில் சொல்ற மாதிரி இருக்கே”
கேட்டுவிட்டான்
“ஐயோ, இதை எப்படி நாம் அவளிடம் கேட்பது?
உள்ளுக்குள் உடைந்தான். ” சரி கேட்டுரலாம். கேக்கலன்னா, நமக்கு மனசு தாங்காது”
” ம்… மஞ்சு…! தயங்கினான்.
” சொல்லுங்க” ” ம்… இத எப்படிச் சொல்றது?
” ம்… எதா இருந்தாலும் சொல்லுங்க”
” ம்… சரி, நேத்து நான் உன் கூட பேசும் போது கூட யார் இருந்தது?
” என்ன ஏன் இப்படி கேக்குறீங்க?” நான் மட்டும் தான் இருந்தேன். நீங்க கற்பனையில இருக்கீங்க. ஏதோ குழப்பத்தில இருக்கீங்க போல. நான் அப்படி எல்லாம் இல்ல. என் அம்மா மேல சத்தியம். நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். ” உறுதி கூறினாள் மஞ்சு
” உண்மையாவா? நிஜமாவா?
” உண்மை உங்களைத் தவிர எனக்கு யாரையும் பிடிக்காது”
என்று மறுபடியும் உறுதி சொன்னாள் மஞ்சு
” நம்பலாமா ?”
” நீங்க என்ன முழுசா நம்பலாம். செக்கு மாட்டுக்கும் சிவலிங்கத்துக்கும் அர்த்தம் தெரியாம பேசுறீங்க. நான் எப்பவும் சிவலிங்கம் தான். செக்குமாடு இல்ல. நீங்க அதப் புரிஞ்சுக்கணும் “
அதற்கும் தலையாட்டினான் முரளி.
” நீ என்ன ஏமாத்திற மாட்டீயே?”
” நான் பொய் சொல்ல மாட்டேன்.அதெல்லாம் ஒன்னும் இல்ல .நீங்க பேசாம உங்க வேலைய பாக்கலாம் ;நான் சரியா தான் இருக்கேன் .நான் சுத்தமானவ “
என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டே இருந்தாள் , மஞ்சு. ஆனால் முரளிக்குள் அவளைப் பற்றி ஒரு விதமான பயம் இருந்தது .ஒருமுறை நேரில் சந்தித்தான். அவளின் நடவடிக்கைகள் அக்மார்க் போல இருந்தன.
“நீங்க ஒன்னும் குழம்ப வேண்டாம்” நான் சரியாத்தான் இருக்கேன். சான்றிதழ் வழங்கினாள்.
” இல்ல, நீ என்னைய ஏமாத்திற மாட்டியே? “
மறுபடியும் கேட்டான் முரளி.
“சத்தியமா நான் ஏமாத்த மாட்டேன். உங்களுக்கானவள்தான் நான். அவனின் கை பிடித்துச் சொன்னாள் மஞ்சு.
முரளியின் வயதை ஒத்த நண்பர்கள் அவனைத் திட்டினார்கள்.
” டேய் முரளி, நீ இப்படி எல்லாம் இருக்க கூடாது. உன்ன நேசிக்காதவங்கள நீ நேசிக்கிறது முட்டாள் தனம். இது தப்புன்னு நினைக்கிறேன்; பாத்துக்கோ “
என்று முரளிக்கு அறிவுரை கூறினார்கள் நண்பர்கள்.
“அப்படி எல்லாம் இருக்காது. மஞ்சு ரொம்ப நல்லவ . அவளை மாதிரி ஒரு தங்கமான பெண்ணைப் பார்க்க முடியாது”
பத்திரம் எழுதிக் கொடுத்த மாதிரி உறுதியாப் பேசினான்முரளி
“நிஜமா சொல்றியா?”
” கண்டிப்பா .அவ பத்தரமாத்துத் தங்கம் “
என்று எல்லோரிடமும் சொன்னான்.
” என்னவோ தெரியல” பாத்துக்க முரளி “
” அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ ?”
முழுவதுமாக ஆட்கொண்டிருந்த அவளின் சிந்தனைகளை அவனால் வெளியே இறக்கி வைக்க முடியவில்லை.
” நிச்சயம். நம்ம மாதிரி அவளுக்கும் இந்த பாசம் இருக்குமா? அன்பு இருக்குமா ?
யோசித்தான் முரளி .மறுபடியும் போன் செய்தான்.
” நான் சத்தியமான உங்களுக்கானவள் தான். நீங்க ஒன்னும் புலம்ப வேண்டாம்”
என்று அவள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏதோ வேறொருவருடன் பேசும் குரல் கேட்டது .
“என்ன யார் கூடவோ பேசுற மாதிரி இருக்கே?
என்று மஞ்சுவிடம் கேட்க
“ஐயோ எப்பவும் உங்களுக்கு இப்படித்தான் .உங்களுக்கு மனசுல ஏதோ பிரச்சினை இருக்குன்னு நினைக்கிறேன். நீங்க நல்ல டாக்டரா பாருங்க .அவனையே திருப்பி விட்டாள் மஞ்சு.
எங்க அம்மா சத்தியமா சொல்றேன். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நிஜமா நான் நல்லவ . “
உண்மைக்கு பக்கத்தில் பேசினாள்.
” அப்படி எல்லாம் இருக்காது தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான் முரளி.
இரவு பகல் எப்பொழுதும் அவள் நினைவுதான். அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ? என்றவனுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்.
விலை மாதர்கள் கிட்ட போறோம் வாரியா? நண்பர்கள் கேட்க
‘ ஐயோ அதெல்லாம் எனக்கு பிடிக்காது. நான் வரல.. “
நண்பர்களை உதறினான் முரளி
அவனுக்கு தான் மஞ்சு இருக்காளே ?சிரித்தார்கள் .
‘ஏன் சிரிக்கிறீங்க?”
” இல்ல காதல்ங்கிற பேர்ல ஒருத்திய மட்டும் நெனச்சுக்கிட்டு அவ நமக்கு மட்டும் தான் அப்படின்னு வாழ்ந்துட்டுயிருக்கிற உன்ன மாதிரி ஆளுங்க தான் கடைசில பைத்தியமா அலையுறானுக . உண்மையிலேயே மஞ்சு உன்னை மட்டும் தான் நேசிக்கிறதா நினைச்சுட்டு இருக்க போல?
கேள்வியாய் கேட்டான் ஒரு நண்பன் .
“ஆமா, கண்டிப்பா அவ என்ன மட்டும் தான் நினைச்சிட்டு இருப்பா”.
முரளி சொல்ல அந்த இடமே அதிரும்படி கடகடவெனச் சிரித்தார்கள் நண்பர்கள் .
“, ஏன் சிரிக்கிறீங்க?”
“பெண்களைப் பற்றி உனக்குத் தெரியாது .அதுதான் நீ இப்படி பேசுற? ஒரே பொண்ண நினைச்சுக்கிட்டு இருக்க ? கண்டிப்பா ஒரு நாள் உனக்கு விளங்கும். அப்ப வருத்தப்படுவ?”
என்ற நண்பர்கள் சொல்ல
“இல்ல என்னுடைய மஞ்சு அப்படிப்பட்டவ இல்ல. அவன் மனதுக்குள் அவளைப் பத்திரமாக எழுதினான்.
” ஏன் இப்படிச் சொல்றாங்க? அவ நல்லவ தானே? என்னை விட்டுட்டு வேற தவறு செய்வாளா என்ன? குழம்பிப் போய் மறுபடியும் போன் செய்தான்
” ஹலோ” மஞ்சு எப்படி இருக்க?
” நல்லா இருக்கேன் “
“என்ன செய்ற?
” சும்மாதான் வீட்லதான் இருக்கேன்”
மறுபடியும் முரளியுடன் பேசிக் கொண்டே மஞ்சு வேறு யாருக்கோ பதில் சொல்லும் சத்தம் கேட்டது .
“வீட்ல யாரு இருக்கா?”
” யாருமே இல்லையே?”
“இல்ல ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு. “
“எப்ப பார்த்தாலும். இதே மாதிரி தான் பேசிட்டு இருக்கீங்க. உங்களுக்கு ஏதோ மனப் பிரச்சினை இருக்குனு நினைக்கிறேன். நல்ல டாக்டரா பாருங்க. சொல்லிக் கொண்டு லேசாக சிரித்தாள்.
” என்ன மஞ்சு “
” உண்மையத்தான சொல்றேன். நீங்க நல்ல டாக்டரா பாருங்க.
“இவ சொல்றது நிஜமா இருக்குமா? இல்ல நண்பர்கள் சொல்றது நிஜமா இருக்குமா? இல்ல மஞ்சு சொல்றது நிஜமா இருக்குமா? குழம்பிப் போய் நின்றான் முரளி
“பெண்களைப் பற்றி உனக்கு தெரியாது .நீ போகப் போக புரிஞ்சிக்கிருவ “
என்ற நண்பர்கள் சொன்னதைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருந்தான், முரளி.
மறுபடியும் மஞ்சுவுக்கு போன் செய்தான். போன் வெயிட்டிங்கில் இருந்தது. அவள் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.