டமாஸ்கஸ், மார்ச் 9–
சிரியாவில் பாதுகாப்பு படையினருக்கும் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 நாட்களில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டு, ஏராளமான பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டுப் போர் தொடங்கியது. இந்த உள்நாட்டுப் போரில் ரஷ்யாவும், ஈரானும் ஆசாத் தலைமையிலான அரசுக்கு பெரும் ஆதரவாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கிளா்ச்சிப் படையினர் திடீரென தாக்குதல் நடத்தினர். மேலும் தலைநகர் டமாஸ்கஸை கடந்த டிசம்பர் 8 ந்தேதி கைப்பற்றினர்.
இதையடுத்து ஆட்சியை இழந்த அதிபா் பஷர் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் தனி விமானத்தில் ரகசியமாக ரஷ்யாவுக்கு தப்பி சென்றார். இதனைத் தொடர்ந்து ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல் ஷரா அந்த நாட்டின் இடைக்கால அதிபராக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டார்.
1000 பேர் பலி
இந்த நிலையில், முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவுப் படையினருக்கும் அரசின் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பழிவாங்கும் கொலைகளில் சுமார் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
14 ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் நடந்த மிக மோசமான மற்றும் கொடூரமான சம்பவமாக இந்த வன்முறை சம்பவம் பார்க்கப்படுகிறது. ஆசாத்தின் ஆட்சியின் கீழ், அலவைட் சிறுபான்மை பிரிவினர் ராணுவத்திலும் பிற சலுகைப் பதவிகளிலும் உயர் பதவிகளை அனுபவித்தனர். இருப்பினும், புதிய ஆட்சி மூன்று மாதங்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, முன்னாள் அதிபருடனான தொடர்புக்காக அலவைட் மக்கள் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டனர்.
பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம், 745 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தவிர, மிக அருகில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 125 அரசு பாதுகாப்புப் படை உறுப்பினர்களும், ஆசாத்துடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 148 போராளிகளும் கொல்லப்பட்டதாகக் தெரிவித்துள்ளது.