நாகர்கோயில், ஜூலை 28–
2000 ரூபாய் கொரோனா நிவாரண உதவியை சிரித்த முகத்துடன் பெற்றுக் கொண்டு, அதன் மூலம் பிரபலமான நாகர்கோவில சேர்ந்த வேலம்மாள் பாட்டி (வயது 87) இன்று காலமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள கலுங்கடியை சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், திமுக ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, கொரோனா நிவாரண நிதியாக இரண்டு கட்டமாக 2000 ரூபாய் வழங்கியது.
போட்டோ போஸ் பாட்டி
அப்போது, வேலம்மாள் பாட்டி ரேஷன் கடையில் நிவாரண தொகையை பெற்றபோது, சிரித்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்த படம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. இதன் பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலம்மாள் பாட்டியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் உதவித் திட்ட விளம்பரங்களில், வேலம்மாள் பாட்டி தவறாமல் இடம் பிடித்தார். தமிழ்நாடு முழுவதும், ஒட்டப்படம் சுவரொட்டிகளில் மட்டுமல்லாது, அரசின் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இவர் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வேலம்மாள் பாட்டி உடல்நிலை சரியில்லாத நிலையில், தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று அவர் உயிரிழந்தார். இவருக்கு தமிழ்நாடு முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.