செய்திகள்

‘‘சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது’’

Makkal Kural Official

ஐகோர்ட் கண்டனம்

சிதம்பரம், அக். 19–

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் ‘‘கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது’’ என சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியாதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பொது தீட்சிதர் குழுவின் முடிவில், தலையிட இந்து அறநிலைத்துறை அதிகாரம் இல்லை என்றும் இணை ஆணையரின் உத்தரவு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணை வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கோயில் தங்களுக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும் நீதிமன்றம் தான் இதனை கட்டுப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக சுட்டி காட்டிய நீதிபதி, மன கஷ்டங்களுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார். தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது தெரிவித்த நீதிபதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைப்பதாகவும் குறிப்பிட்டார். சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடத்துப்பட்டு வந்த ஆரூத்ரா தரிசனம் தற்போது பல கோவில்களில் நடத்தப்படுவதாகவும் சிதம்பரம் கோவில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை எனக்கூறினார். இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகி விடும் எனவும் கோவிலில் காசு போட்டால்தான் பூ கிடைக்கும் என்றும் இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *