சிதம்பரம், ஜன.22–
கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை மற்றும் ஆறுமுக நாவலர் சைவ பிரகாச வித்யாசாலை அறக்கட்டளை இணைந்து நடத்திய திருவள்ளுவர் விழா ஞானப்பிரகாசம் வடக்கு தெருவில் அமைந்துள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் துவங்கியது.
முதல் நிகழ்வாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து இசை ஆசிரியர், கடலூர் அரசு பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் ப.சத்திய நாராயணன் திருமுறை இசை நடைபெற்றது.
ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஜெயராமன் தலைமையில், அறக்கட்டளையின் செயலாளர் சு.அருள்மொழி செல்வன் முன்னிலையில் விழா நடைபெற்றது. ஆசிரியர் ராகவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை முதுகலை ஆசிரியை எம்.அகிலா அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக புல முதல்வர் அரங்க.பாரி “இலக்கியத்தில் அறம்” தலைப்பில் சிறப்புரையாற்றி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியை ஆர்.சுமதி சிறப்பாக செய்திருந்தார். சேது சுப்பிர மணியம் பொன்னம்பலம் பாலசுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆறுமுக நாவலர் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்.