செய்திகள் நாடும் நடப்பும்

சிங்கப்பூர் அரசியலிலும் சாதிக்கும் தமிழர்கள்


நாடும் நடப்பும்


ஆசியாவின் சிறப்பு மிக்க தீவு நாடான சிங்கப்பூர் பொருளாதார வல்லரசுகளில் ஆசியாவின் ஜோதியாகவே ஜொலிப்பதை அறிவோம். அரசியல் உறுதித் தன்மைக்கும் ஊழல் அறவே இல்லாத நாடு என்பதற்கும் பாராட்டப்பட்டு வரும் சிங்கப்பூரில் செப்டம்பர் 1 ந்தேதி பிரதமர் தேர்வுக்கான பொதுத் தேர்தலுக்கு தயாராகி விட்டது.

தமிழக அரசியல் தலைவர்கள் இங்கு சிங்கப்பூரின் அபரீமித வளர்ச்சியைப் போன்று ஒரு புரட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறி இருப்பதை அறிவோம். இம்முறை ஒரு தமிழ் வம்சாவளியினர் சிங்கப்பூரின் அதிபர் தேர்தலில் ஏற்பட்டுள்ள மும்முனை போட்டியில் முன்னணியில் இருக்கிறார்.

தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் முன்னிலையில் உள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு ஆட்சிக் காலம் அடுத்த மாதம் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் (வயது 66) மற்றும் இங் கொக் சொங் (வயது 76), டான் கின் லியான் (வயது 75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. செப்டம்பர் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. சுமார் 27 லட்சம் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முதல்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் கடந்த 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணைப் பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் இங் கொக் சொங் கடந்த 1970-ம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் நிதியமைச்சக முதலீட்டு ஆய்வாளராகப் பணியைத் தொடங்கினார். கடந்த 2007-ம் ஆண்டில் ஜிஐசி என்றழைக்கப்படும் சிங்கப்பூர் அரசின்முதலீட்டு நிறுவனத்தின் தலைமைஅதிகாரியாக பதவியேற்றார். கடந்த 2013-ல் ஓய்வு பெறும் வரை அந்த பதவியை வகித்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

மற்றொரு வேட்பாளர் டான் கின்லியான் சுமார் 30 ஆண்டுகள் என்டியுசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் முன்னிலையில் இருக்கிறார்.சிங்கப்பூரின் வளர்ச்சி சரித்திரத்தில் பல தமிழர்களின் பங்கு மறுக்க முடியாதவையாகும். இம்முறை அதிபர் தேர்தலில் ஓர் தமிழர் வெற்றி வாய்ப்பை பெறும் அளவுக்கு உயர்ந்திருப்பது நம் இரு நாடுகளுக்குமிடையே இருக்கும் தொப்புள்கொடி உறவுகளுக்கு கிடைத்திருக்கும் பெருமையாகும்.

இந்திய – சிங்கப்பூர் நல்லுறவு தொடரவேண்டும் ;

அதற்கு தலைமை ஏற்கும் பொறுப்பு நம்தமிழருக்கு கிடைக்குமா?

பொறுதிருப்போம்; காத்திருப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *