சென்னை, ஜூலை.17-–
சாலை விபத்துகளில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு ரூ.10 ஆயிரம் வெகுமதி அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது.
சாலை விபத்தில் காயமடைந்த வர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் தொகையுடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் அறிவித்தார்.
இதனைப் பெறுவதற்கு சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக (கோல்டன் ஹவர்) மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று, உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும். அவர்கள் குறித்த விவரங்களை போலீஸ் நிலையம் அல்லது மருத்துவமனையிடம் பெற்று கலெக்டர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெகுமதி தொகையை பெற தகுதியானவர்கள் குறித்த பரிந்துரையை மாதந்தோறும் போக்குவரத்து ஆணையரகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படு பவரின் வங்கிக் கணக்கில் ஆணை யரகம் வாயிலாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்படும். தங்களது அடை யாளத்தை வெளிக்காட்டி கொள்ள விரும்பாதவர்களுக்கு வெகுமதி வழங்கப்படாது எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெகுமதியைப் பெறுவதற்கு சில வழிகாட்டுதல்களும் வெளி யிடப்பட்டுள்ளது. அதன்படி, உயிர்களை காப்பாற்றுவோருக்கு விபத்து எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றியிருந்தால் அவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும், ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் ரூ.5 ஆயிரம் பகிர்ந்தளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அத்துடன், ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த திட்டம் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்து உள்ளார்.