கதைகள் சிறுகதை செய்திகள்

சாலைப் பாதுகாப்பு..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

“சாலைப் பாதுகாப்பு வாரம் ” என்று இருசக்கர வாகனங்கள், கார் ஓட்டிப் போகிறவர்களைக் கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்துக் கொண்டிருந்தார்கள் போக்குவரத்துத்துறைக் காவலர்கள். ஆங்காங்கே பாதுகாப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன

“சார், ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டிட்டுப் போங்க அதுதான் உங்களுக்கு நல்லது. உங்க குடும்பத்துக்கும் நல்லது “

என்று போலீஸ்காரர் அல்லாத ஒருவர் சொன்னார் .ஆனால் அங்கிருந்த போலீஸ்காரன் இதையெல்லாம் சொல்லாமல்,

” ஏன் ஹெல்மெட் போடல “

என்று அபராதம் விதிப்பதில் மட்டுமே கவனமாக இருந்தார்கள்.

” ஏன் சார், என்னுடைய பணம், என்னுடைய வண்டி ,நான் ஹெல்மெட் போடுவேன். போடாம இருப்பேன். அத கேக்க நீங்க யாரு?

என்று எதிர் கேள்வி கேட்டான், ஒரு வாகன ஓட்டி .

“அரசாங்கத்தில சட்டம் போட்டு இருக்காங்க .ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்டணும்னு. நீங்க ஹெல்மெட் போடல அபராதம் கொடுங்க “

என்று போக்குவரத்துக் காவலர் சொல்ல

” அது சரிங்க ,ஹெல்மெட் போடலன்னு தெரிஞ்சதும் இவ்ளோ அக்கறையா கேட்கிறிங்க. நான் சாப்பிடாம வண்டி ஓட்டிட்டுப் போறேன் .அது உங்களுக்கு தெரியுமா ? தலையில ஹெல்மெட் இல்லைன்னு மட்டும் கேட்கிறிங்க. எனக்கு பசி இருக்கா இல்லையான்னு என்று கண்டுபிடிச்சிங்களா?”

என்று விவாதம் செய்தான், ஒரு வாகன ஓட்டி.

“,அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க .நீங்க ஹெல்மெட் போடல அதுதான் தெரியும் . ஃ பைன் குடுங்க “

என்று போக்குவரத்துக் காவலர் சொல்ல,இவருடன் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை

என்று நினைத்த அந்த வாகன ஓட்டி வேறு வழியின்றி அவர் விதித்த அபராதத் தொகையைக் கட்டிவிட்டு சென்றான்.

அப்போது, ஓடி வந்த ஒரு போக்குவரத்துக் காவலர்

” சார்,ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு. சார். இருசக்கர வாகனத்தில் போன ரெண்டு பேரு ரொம்ப கவலைக்கிடமா கிடக்குறாங்க “

என்று போக்குவரத்து காவலர் ஒருவர் சொல்ல

“யாருங்க இப்ப எல்லாம் நம்ம சொன்னா கேக்குறானுங்க .ஹெல்மெட் போடுறதில்ல. குடிச்சிட்டு வண்டி ஓட்டுறாங்க. அரசாங்கம் அபராதம் போட்டா நம்மள தப்பா நினைக்கிறாங்க. நம்மளா இந்த பணத்தை வாங்கி வீட்டுக்கு எடுத்துட்டு போறோம் . அரசாங்க சொல்றாங்க. அதச் செய்றோம் .அதை புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க “

என்று கொஞ்சம் கூட விடாமல் பேசிக் கொண்டிருந்தார் அந்தப் போக்குவரத்து உயர் அதிகாரி

“சார் அது இல்ல சார். இந்த மேட்டரே வேற ? “

என்று தலையைச் சொரிந்தார் இன்னொரு போக்குவரத்துத் துறைக் காவலர்

“என்ன பிரச்சனை. எதுவும் சண்டை போட்டானுகளா ? இல்ல பைக்கு லாரியும் மோதிருச்சா. இல்ல பைக் ஓட பைக் இடிச்சிருச்சா ?”

என்று அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தார் ,அந்த உயர் அதிகாரி

” சார் இது வேற சார் வந்து பாருங்க”

என்று அந்தப் போக்குவரத்துக் காவலர் சொல்ல

“என்னையா புதுசா சொல்லிக்கிட்டு இருக்க ? வேற எதுவும் பிரச்சனையா ?”

என்று அந்த உயர் அதிகாரி கேட்க

” ஹெல்மெட் போடலைன்னா புடிக்கிறீங்க ,ஹாஸ்பிடல், ஸ்கூல் காலேஜ் இங்கே எல்லாம் நின்னு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தறது இல்ல. ஹெல்மெட் போடலைன்னா மட்டும் ஓடி அவனை விரட்டிப் பிடிக்கப் போயி ,சாவைக் கூட பல பேரு சந்திச்சு இருக்காங்க. ரோடு சரியல்ல. மழை பேஞ்சா தண்ணி தேங்குது .எது பள்ளம் எது மேடுன்னு தெரியல .ஆனா இப்படிப்பட்ட விஷயத்துக்கு நீங்க என்ன சார் சொல்ல போறீங்க? ஹெல்மெட் போட்டும் ரெண்டு பேர் இப்ப உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்க. என்ன நடக்கும்னு . இப்ப இதுக்கு நீங்க பதில் சொல்லுங்க”

என்று சில வாகன ஓட்டிகள் சொல்ல,

அந்த உயர் அதிகாரி

“ஏதோ சொல்றானுங்க போல”

என்று அங்கு போய் பார்த்தவருக்கு அதிர்ச்சி

” ஆமா சார். இதுதான் சார் இங்க நடக்குது. இது மேய்ச்சல் நிலமா? இல்ல, மாடுகள் வந்து ஓய்வெடுக்கிற இடமா? எவனாே மாடுகள வளத்து பணம் சம்பாதிக்கிறதுக்கு, இங்க நிறைய மனுசங்க பலியாகுறாங்க சார் இந்த மாதிரி ரோட்டல திரியுற மாடுகள் மேல மோதி நிறைய பேரு காயம் பட்டிருக்காங்க. ஹெல்மெட் போடல கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போடலன்னு பிரச்சனையைச் கொடுத்து பணத்தை வசூல் பண்றிங்க. இந்த மாடு இப்படி படுத்து கிடந்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் பண்ணுது. இத யார் கேக்குறது. இது நிறைய உயிர்களை காவு வாங்கி இருக்கே இதுக்கு என்ன சார் செய்ய போறீங்க ? இதுக்கு யாரு கிட்ட வசூல் பண்ண போறீங்க ? மாட்ட புடிச்சு ஜெயில்ல போடப் போறீங்களா? இல்ல மாட்டுக்காரனப் புடிச்சு கம்பி எண்ண வைக்கப் போறிங்களா ? இது எல்லாம் தெரியாம முக்கு முக்கு நின்னு திருடனைப் பிடிக்கிறது மாதிரி ஹெல்மெட் போடாதவங்கள புடிக்கிறீங்களே? உங்களுக்கு அசிங்கமா இல்லையா சார் ? “

என்று ஒருவர் சொல்ல

அவமானத்தில் வெக்கித் தலை குனிந்தனர், போக்குவரத்து அதிகாரிகள்.

” மாட்டுக்குத் தான் அறிவில்ல அத வளக்கிற மனுசங்களுக்குமா அறிவு இல்லாமப் போச்சு ? “

என்று ஒருவர் சொல்ல,

இந்த மாடுகளால் மரணம் மட்டுமல்ல , இதனால் பெரிய கலவரங்கள் கூட ஏற்படலாம் என்று முடிவு செய்தது அரசு.

இனி மாடுகள் ரோட்டில் அலைந்தால், மாடுகள் பிடிக்கப்படும். மாடு வளர்ப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது.மறுநாள், மாடுகளற்று விரிந்து பரந்து கிடந்தது, தார்ச்சாலை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *