நாடும் நடப்பும்

சாதிக்கும் பாதுகாப்பு தொழில்துறை

Makkal Kural Official

தலையங்கம்


ஒவ்வொரு துறையிலும் தற்சார்பு என்பது ஒரு வலுவான பொருளாதாரத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்து வலுவான உற்பத்தித் தளத்தை உருவாக்கவும் பாதுகாப்பு, ஆராய்ச்சி – மேம்பாடு புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை உருவாக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களை அமைத்தல், 5,500-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஐந்து உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்கள் வெளியீடு ஆகியவை இத்துறையில் தற்சார்புக்காக பாதுகாப்பு அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் ஆகும்,

இந்த முயற்சிகளின் காரணமாக தற்போது ஜிஇ-414 இன்ஜின்கள் சமீபமாக இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு அமெரிக்கப் பயணத்தின் போது, ​​ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) இடையே ஒரு முக்கிய ஒப்பந்தமாகும்.

மேம்பட்ட போர் ஜெட் என்ஜின் தொழில்நுட்பத்திற்காக இந்தியா இனி ஏங்கிக் காத்து இருக்க வேண்டியது இல்லை.

இந்த நவீன தொழில்நுட்ப எஞ்சின் முழு அதிகார டிஜிட்டல் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் (FADEC) என்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.

பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் மற்ற நாடுகளைச் சார்ந்திருந்த காலம் மாறிவிட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகள் மட்டுமே போர் விமானங்களுக்கான இயந்திரங்களைத் தயாரிக்கத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உலோகவியலில் தேர்ச்சி பெற்றுள்ளன.

வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றும் இந்த நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார். 2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு அமைச்சகம் ரூ. 3 லட்சம் கோடி மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்ற மாதம் செப்டம்பர் 25, 2024 அன்று, இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் ஏற்றுமதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தொலைநோக்குத் திட்டமான ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் 10வது ஆண்டு நிறைவை இந்தியா கொண்டாடியது. 2014 இல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரம், பல துறைகளில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த முயற்சி இந்தியாவின் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து அதன் ஏற்றுமதித் திறனை கணிசமாக அதிகரித்து உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை உயர்த்தியது.

இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ. 21,000 கோடியைத் எட்டியுள்ளது, 2029 ஆண்டுக்குள் ராணுவ தளவாட ஏற்றுமதியை ரூ.50,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *