“வானம் வசப்படும் என்பார்,
வையகம் ஆள்வார் என்பார்!
சங்க காலம் தொடங்கி இன்று வரை,
வரலாற்றில் நீக்கமற நிறைந்தாள்!
அவ்வையார் முதல் கமலா ஹாரிஸ் வரை
வீட்டிலும் நாட்டிலும் பெரும் பங்காற்றிக்கொண்டே, தியாகத்தின் திருவுருவாய் ஒளிர்கிறாள்!
தன்னம்பிக்கை எனும் தாய்ப்பால் ஊட்டி,
தரணியை வெல்லும் திறனும் பெற்றாள்!
கல்வி, கலை, இலக்கியம், அறிவியல்,
அனைத்திலும் முத்திரையைப் பதித்தாள்!
சமுதாய மாற்றத்தின் சுடர் விளக்காய்,
மகிழ்ச்சி பொங்கச் சாதித்தாள்!
மகளிர் தினத்தில் மட்டும் வணங்காமல்,
தினந்தோறும் ஏற்றிப் போற்றுவோம்! “
பெண்களின் பெருமையை
உலகிற்கு உரக்கச் சொல்வோம்,
“மகளிர் மாணிக்கங்கள்” என்று வாழ்த்துவோம்!
ஏனெனில் பெண்கள் நாட்டின் சரிபாதி மட்டுமல்ல; இன்றைய நிலையில் மிகைப் பாதியாய் உள்ளார்கள் என்பதே உண்மை. குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்களின் மேம்பாடு இந்தியாவின் நிலையில் இருந்து பெரிதும் மேம்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் உயர்கல்விக்கு செல்லும் மகளிர் 28 சதவீதமாக இருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் உயர்கல்வி பெரும் பெண்களின் விழுக்காடு 48 சதவீதத்துக்கு மேல் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகிறது. மகளிரின் இத்தகைய உயர்வுக்கு சமூக சீர்த்தவாதிகளின் பங்களிப்பு, குறிப்பாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார், கேரளாவில் நாராயண குரு, மராட்டியத்தில் மகாத்மா பூலே, சாவித்ரி பூலே போன்றவர்களின் பங்களிப்பு என்றும் நினைவு கூறப்பட வேண்டிய ஒன்று. அந்த வகையில், குறுகிய காலத்தலேயே பல்வேறு துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கோலோச்சி வருவது பாராட்டுக்குரியது.
அந்த வகையில், நடப்பு 2024 ஆண்டின் நிறைவாக, மக்கள் குரல் நாளிதழ் சார்பாக ஆண்டுதோறும், சிறந்த பெண் ஆளுமைகள் 10 பேரை கண்டறிந்து சமூகத்திற்கு அடையாளம் காட்டி வருகிறோம். அதன் மூலம், மேன்மேலும் அவர்கள் சமூகத்திற்கு பயன்படுவார்கள் என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டும் 10 பெண் ஆளுமைகளை கண்டறிந்து சாதனை மகளிர் மகுடம் சூட்டி, மக்கள் குரல் நாளிதழ் பெருமை கொள்கிறது. 10 பெண்களின் இந்த வரிசை என்பது ஒருவருடைய உயர்வு, பெருமை அடிப்படையில் அல்லாமல், 10 பேரையும் சமமான இடத்திலேயே வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
1. கேரம் உலக சாம்பியன் மெ.காசிமா

அமெரிக்காவில் நவம்பர் 11 ந்தேதி முதல் 17 ந்தேதி வரையில் நடைபெற்ற 6-வது உலக கேரம் போட்டிகளில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட 3 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு சிறப்பு சேர்த்தார் மெ.காசிமா. சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மேஹ்பூப் பாஷாவின் மகள்தான் காசிமா. இவர் தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். தனது தந்தையின் குறைந்த வருமானத்திலேயே, தனது தீராத ஆர்வத்துடன் கேரம் விளையாட்டில் மாநில மற்றும் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், 2024 நவம்பர் மாதம் 11 ந்தேதி முதல் 17 ந்தேதி வரை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற 6 வது உலக கேரம் போட்டியில் கலந்து கொள்ள, 3 வீராங்கனைகள் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1,50,000/- வீதம் மொத்தம் ரூ.6 லட்சத்துக்கான நிதியுதவியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் கீழ் வழங்கியிருந்தார். இந்த நிதியின் மூலம் அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் தமிழ்நாட்டு வீராங்கனைகள் பெருமை சேர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மெ.காசிமாவுக்கு ரூ.1 கோடியும் குழு போட்டிகளில் அவருடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்ற வி.மித்ரா, கே.நாகஜோதி ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரம் தங்க மங்கை மெ.காசிமாவை 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சாதனை மகளிரில் ஒருவராக மக்கள் குரல் தேர்ந்தெடுத்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது.
2. கலை, பண்பாட்டு பெருமை பரப்பும் திரிபுர சுந்தரி செவ்வேள்

சென்னையைச் சேர்ந்த திரிபுர சுந்தரி செவ்வேள், அடிப்படையில் கட்டடக் கலை நிபுணராக இருந்தாலும், சென்னையின் பெருமைகளை, “நம்ம வீடு, நம்ம ஊரு, நம்ம கதை” என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் எடுத்துச்சொல்லும் கதை சொல்லியாக பிரபலமாக விளங்கி வருகிறார். இந்த பெருமைமிகு தொண்டுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள திரிபுர சுந்தரி செவ்வேள், நமது கலை, பண்பாடு ஆகியவற்றை மாணவ சமூகங்களிடம் மட்டுமின்றி, தொண்டு நிறுவனங்களிடமும் எடுத்துச் சொல்லி வருவதையொட்டி, மக்கள் குரல் சார்பாக சிறந்த சாதனை மகளிராக தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது.
3. திருநங்கைகளுக்கு உதவும் நீலம் ஜெயின்

சென்னையைச் சேர்ந்த நீலம் ஜெயின் என்ற பெண், பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, திருநங்கைகளின் பிரிச்சினைகளை அறிந்து, பெரிஃபெரி என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் திருநங்கைகளுக்கு நல்ல வேலைகள் கிடைக்கவும், தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவும் உதவி வருகிறார். இது மட்டுமல்லாமல், பல நிறுவனங்களில் திருநங்கைகள் மீதான பொதுப் பார்வையை மாற்றி, அவர்களை அங்கீகரிக்க வைத்து சிறப்பான வேலைகளை வாங்கிக்கொடுக்கவும் உதவுகிறது. இது வரையில் 170 க்கும் மேலான திருநங்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, வேலை வாங்கிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருநங்கைகளின் திறமைகளை மேம்படுத்தி, திருநங்கைகள் (LGBTQIA) சமூகத்துக்கு ஒரு அங்கீகாரம் ஏற்படுத்தி அவர்கள் நல்ல வேலைகளில் சேர உதவுகிறது. திருநங்கை சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிந்தவர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பெரிஃபெரி அமைப்பைத் தொடங்கி செயல்படுத்தி வரும் நீலம் ஜெயின் 2024 ஆம் ஆண்டின் சிறந்த சாதனை மகளிரில் ஒருவராக மக்கள் குரல் நாளிதழ் தேர்ந்தெடுப்பதில் பெருமை கொள்கிறது.
4. பராஒலிம்பிக் துளசிமதி முருகேசன்

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு விளையாட்டு எதற்கு என்று கேலி செய்தவர்களை “என் கைகளின் வலிமையை இந்த உலகமே அறியட்டும்” என்று பாராலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று உணர்த்தி இருக்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன்.
ஏப்ரல் 11, 2002 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்தவர் துளசிமதி. 24 வயதாகும் துளசி, நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறார். பிறந்தது முதலே துளிசியின் இடது கையில் குறைபாடு இருந்தது. கட்டைவிரல் இழப்பு, நாள்பட்ட உல்நார் நியூரிடிஸ் மற்றும் தசைச் சிதைவு போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டார். இதனிடையே, விபத்து ஒன்றால் அவருடைய இடது கையை தூக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் துளசி. இருப்பினும், துளசிக்கு சிறு வயது முதலே விளையாட்டு மீது ஆர்வம் இருந்தது. ஓட்டப்பந்தயம் போன்ற தடகள விளையாட்டுகளுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டவருக்கு, 7வது வயதில் பேட்மிண்டன் மீது ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி எடுத்தார்.
2023ம் ஆண்டு சீனாவின் காங்சூ பகுதியில் நடந்த ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்றிருக்கிறார். தொடர் பயிற்சி விடாமுயற்சியோடு பேட்மிண்டன் விளையாடி வந்த துளசிமதி, பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் 2024 செப்டம்பர் 2 ந்தேதி பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன் – சீனாவின் க்யு ஹ்யா யங் உடன் மோதி வெள்ளிப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை 2024 ஆம் ஆண்டின் சாதனை மகளிர் பிரிவில் தேர்ந்தெடுப்பதில் மக்கள் குரல் பெருமை கொள்கிறது.
5. வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமதி ஆதிலட்சுமி லோகமூர்த்தி குடும்பநல சமரசமையத்தின் நடுவராக பணியாற்றி வருவதுடன், ஊரக விரிவாக்க சேவை அறக்கட்டளையின் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றி வருகிறார். சட்ட ஆலோசகர் மற்றும் பயிற்சியாளரான ஆதிலட்சுமி சமூக ஆர்வலராகவும் உள்ளார். தனது கட்சிக்காரர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்குவதில் சிறப்பு வல்லுநராக உள்ளார். உரையாடுவதில் வல்லவரான இவர், அண்மையில் உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் வரையில் தன்னை புதுப்பித்துக்கொள்பவராகவும் உள்ளார். மேலும் இளைய தலைமுறைக்கு தேவையான சட்ட அறிவை கற்பித்து பெண்களை அதிகாரப்படுத்துவதில் முன்னிலையில் உள்ளார். மேலும் சுயஉதவிக்குழு பெண்கள் உள்ளிட்ட அமைப்பில் பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவதுடன் பல்வேறு சட்ட கல்லூரிகளில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
6. மருத்துவர் பூர்ண சந்திரிக்கா

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியின் இயக்குநர் இருப்பவர் டாக்டர் பூர்ண சந்திரிக்கா. 228 ஆண்டுகள் பழமையான சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பல நல்லுள்ளங்களின் உதவியோடு வியத்தகு மாற்றங்களை நிகழ்த்தியவர் மருத்துவர் பூர்ண சந்திரிகா. 2018 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனையின் இயக்குநரான பின்னர், அங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை அறிந்து அதில் ஊக்கப்படுத்தி விளையாட்டு போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடத்தி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடையே மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். 2025 ஆம் ஆண்டின் சாதனை மகளிர் பிரிவில் ஒருவராக தேர்ந்தெடுப்பதில் மக்கள் குரல் பெருமை கொள்கிறது.
7. தொல்லியல் ஆய்வாளர், எழுத்தாளர் நிவேதா லூயிஸ்

சென்னையைச் சேர்ந்த நிவேதிதா லூயிஸ் எழுதிய ‘முதல் பெண்கள்’ கட்டுரைத் தொகுப்பின் மூலம் தொடங்கிய எழுத்துப் பயணம், ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’, ‘சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘வடசென்னை வரலாறும் வாழ்வியலும்’, ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்று அடுத்தடுத்து நகர்ந்துகொண்டிருக்கிறது அவரது எழுத்துப் பயணம். பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு எழுதி வரும் நிவேதா லூயிஸை 2024 ஆம் ஆண்டின் சிறந்த சாதனை மகளிர் பிரிவில் தேர்ந்தெடுப்பதில் மக்கள் குரல் பெருமை கொள்கிறது.
8. சமூக ஆர்வலர் லலிதா

சாதிய கொடுமைக்கு சவுக்கடி கொடுக்கும் சமூக ஆர்வலர் லலிதா. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த லலிதா (வயது 34), சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தை எப்படி அணுக வேண்டும் என்பதில் தொடங்கி அந்த வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அவர்களுடன் இறுதி வரை துணை நின்று வழிகாட்டி வருகிறார். சமூக சேவகராக செயல்பட்டு வரும் லலிதா, இன்றும் சமூக நிலையில் ஒடுக்கபட்ட தலித் பெண்களுக்கு நீதி கிடைக்க பாடுபடும் ஒரு மனித உரிமை பாதுகாவலராக (human rights defender) செயல்பட்டு வருகிறார். இவரை, 2024 ஆம் ஆண்டின் சாதனை பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுப்பதில் மக்கள் குரல் பெருமை கொள்கிறது.
9. 20 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு அளித்த டாக்டர் ராதிகா பரத்.

சென்னையைச் சேர்ந்த டாக்டர் ராதிகா பரத், சென்னையில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் “எமர்ஜிங் பிட்” என்ற பிசியோதெரபி மையம் தொடங்கி, 20 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். தற்காலிக தீர்வு என்ற நிலையில் எலெக்ட்ரோ சிகிச்சை முறையை மட்டும் கைக்கொள்ளாமல், நிரந்தர தீர்வு தரும் வகையில், கைமுறை சிகிச்சை, உலர் ஊசி, உடற்பயிற்சிகள் மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய கல்வி ஆகியவற்றை கற்றுக்கொடுப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இவரை, 2024 ஆம் ஆண்டின் சாதனை மகளிரில் ஒருவராக தேர்ந்தெடுப்பதில் மக்கள் குரல் நாளிதழ் பெருமை கொள்கிறது.
10. சுவதர்மா அறக்கட்டளை அருணா குப்புராஜ்

கோவை விளாங்குறிச்சி சேரன் மா நகரில் சுவதர்மா அறக்கட்டளையை 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி நடத்தி வருபவர் அருணா குப்புராஜ். ஸ்வதர்மா அறக்கட்டளை, பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது. சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பு, ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற கொள்கையால் வழிநடத்தப்படுகிறது. ஸ்வதர்மா அறக்கட்டளை மக்கள், செல்லப்பிராணிகளை மட்டுமல்லாது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் நமது புவியையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவைக்கான விருதுகளை பெற்றுள்ள அருணா குப்புராஜை 2025 ஆம் ஆண்டின் சாதனை பெண்கள் வரிசையில் தேர்ந்தெடுப்பதில் மக்கள் குரல் நாளிதழ் பெருமை கொள்கிறது.
நாட்டின் கண்களாக போற்றப்படும் இந்த 10 பெண்மணிகள் கடந்து, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்கள், தங்கள் அளவில் பல்வேறு சாதனைகளை ஒவ்வொரு நாளும் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் சாதனையாளர்கள்தான் என்றாலும் இந்த 10 பேரை சிறப்பு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த பெண்களையும் கவுரவப்படுத்துகிறோம் என்பதே இதன் பொருள். வாழ்க மகளிரின் தன்னலமற்ற தொண்டு.
இப்படி பட்டியல் போட்டு சாதனைகளையும், சாதனையாளர்களையும் ஒரு சிறு கட்டத்தில் அடைத்து விடுவது மக்கள் குரலின் நோக்கமில்லை, அவர்கள் சமூகத்தில் வகிக்கும் முக்கியத்துவத்தையும், பங்காற்றலையும் போற்றும் ஒரு சிறு முயற்சியே இது.
–மா.இளஞ்செழியன்.