ஐதராபாத், நவ. 28–
சாக்லெட் சாப்பிட்ட 8 வயது சிறுவன், அது தொண்டையில் சிக்கியதால், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:–
தெலுங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கங்கன் சிங். எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரங்கலுக்கு குடிபெயர்ந்து தனது குடும்பம் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் சந்தீப் சிங் (வயது 8) அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்றுமுன் தினம் சந்தீப் சிங் தனது தந்தை ஆசையாக வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டான். அப்போது சாக்லெட் துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவனை அருகிலிருந்த எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வாரங்கல் போலீசார் ஒரு அறிக்கையில், ‘சிறுவனின் தந்தை ஆஸ்திரேலியாவில் இருந்து சாக்லெட் வாங்கி வந்திருக்கிறார். சிறுவன் பள்ளிக்கு சாக்லெட் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இதேபோல், சனிக்கிழமை காலை 10 மணியளவில் சாக்லெட் சாப்பிட்ட சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே சிறுவனை வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்’ என்று கூறியுள்ளது.