ஆர்.முத்துக்குமார்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஓரளவு நம்பிக்கை தருவதாக இருப்பதால் பல சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் மிக ஆர்வமாக நம்நாட்டில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அதைவிட நமது வெளியுறவு கொள்கை அன்பு, அமைதி மற்றும் உதவுவது என்று இருப்பதால் நம்நாட்டின் மீதுள்ள மதிப்பு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது.
உலகின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளதார எழுச்சி உத்வேகம் தரும் என்று பிரதமர் சமீபமாக ஜி20 மாநாட்டிலும் அமெரிக்காவில் ஜனாதிபதி மாளிகையின் அரசு முறை வரவேற்பில் கூறினார் அல்லவா, அதை ஆசிய நாடுகளும் வரவேற்று பாராட்டுகிறது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு ‘பாரீன் பாலிசி’ இதழின் கட்டுரையாளர் ஸ்டீவன் குரூக், மத்திய கிழக்கில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த சிறப்பு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் செயல்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஒரு காலத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்கா கோலோச்சி வந்தது. ரஷ்யா, சீனாவால் கூட மத்திய கிழக்கில் ஆழமாகக் கால் ஊன்ற வாய்ப்பில்லை. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை பின்னுக்குத் தள்ளி இப்போது இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகமும் சவுதி அரேபியாவும் இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இந்த இரு நாடுகளும் ஒரு காலத்தில் பாகிஸ்தானோடு நெருக்கம் காட்டி வந்தன. தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது, பொருளாதார உறவை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஐக்கிய அரபு அமீரகமும் சவுதி அரேபியாவும் இந்தியாவோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் இந்தியா, இஸ்ரேல் இடையிலான பாதுகாப்பு, தொழில்நுட்ப உறவும் செழித்தோங்கி வளர்ந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இஸ்ரேலில் முதலீடு செய்ய இந்திய தொழிலதிபர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மத்திய கிழக்கில் அமைந்துள்ள எகிப்து, கடல் பிராந்திய வர்த்தகத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனாவின் சரக்கு கப்பல்கள் செல்கின்றன.
இந்த சூழலில் சீனாவுக்கு போட்டியாக சூயஸ் கால்வாய் பகுதியில் இந்தியாவும் ஆழமாகக் கால் பதித்து வருகிறது. இதில் இந்தியாவுக்கு பக்கபலமாக எகிப்து செயல்படுகிறது. பிரதமர் மோடி அண்மையில் எகிப்தில் பயணம் மேற்கொண்டார். எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி ஓராண்டில் 3 முறை இந்திய பயணம் மேற்கொண்டதால் இரு நாட்டு உறவு வலுவடைந்துள்ளது.
சர்வதேச அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவுடன் அமெரிக்கா கைகோத்து செயல்படுகிறது. இந்தச் சூழலில் மத்திய கிழக்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆக நாம் இதர வளர்ந்த நாடுகள் எல்லாம் காகிதப் புலிகளாக உண்மையில் இருப்பதால் நமது வளர்ச்சிகள் மீது ஆசிய நாடுகளின் எதிர்பார்ப்பும் உயர்ந்துள்ளது.