விவசாயிகளுக்கு அரசு அழைப்பு
சென்னை, நவ.11-
சம்பா பருவத்திற்கான பயிர்க் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர 15ந் தேதி கடைசி நாள் என்று அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சம்பா பருவத்திற்கு பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் 15.9.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் வசிக்கும் விவசாயிகள் இப்பருவத்திற்கு பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கான இறுதி நாள் 15–ந்தேதி ஆகும்.
சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்ய விரும்பி, கூட்டுறவு சங்கங்களை நாடி வரும் கடன் வாங்கிய மற்றும் வாங்காத அனைத்து விவசாயிகளும், பயிர்க் காப்பீடு செய்வதற்கான இறுதி நாளுக்குள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைவதற்கு வசதியாக, அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்பெறும் பொதுச்சேவை மையங்கள் ஆகியவை வங்கி விடுமுறை நாட்களான 12, 13-ந் தேதிகளில் (நாளை, நாளை மறுதினம்) ஆகிய 2 நாட்களும் திறந்து வைப்பதற்கான ஆணைகளை சம்பந்தப்பட்ட சங்கம் அல்லது வங்கி பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மண்டல இணைப் பதிவாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சங்கத்தை அணுகும் எந்த ஒரு விவசாயியும் திருப்பி அனுப்பப்படாமல், பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதையும், அவர்களின் விவரங்கள் உடனுக்குடன் இணைய முகப்பில் பிழையின்றி பதிவேற்றம் செய்யப்பட்டு, வசூலிக்கப்பட்ட காப்பீட்டு கட்டணம், தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்திற்கு உரிய கால வரம்புக்குள் செலுத்தப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்து திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும். மேலும் 12 மற்றும் 13-ந் தேதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க் காப்பீட்டு பிரீமியத் தொகை பெற்றுக் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.