செய்திகள்

சமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்வு அமலுக்கு வந்தது

Makkal Kural Official

புதுடெல்லி, ஏப்.8-

வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்ததுள்ளது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்தநிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதியன்று வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது.

இதன்படி, ரூ.918.50-ல் இருந்து ரூ.818.50 ஆக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடந்த 1-ந் தேதி வணிக சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

இதற்கிடையே கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நேற்று திடீரென ரூ.50 உயர்த்தி உள்ளது.

இதன் மூலம் சென்னையில் ஒரு கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.868.50-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுகிறது. ஏழை மக்களுக்கான ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் 14.2 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.503-ல் இருந்து ரூ.553 ஆகவும் அதிகரிக்கும். ஒவ்வொரு 2 அல்லது 3 வாரங்களுக்கும் நாங்கள் இதை மதிப்பாய்வு செய்கிறோம். கலால் வரி அதிகரிப்பு என்பது பெட்ரோல், டீசல் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாது. சர்வதேச சந்தையில் சமையல் கியாஸ் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.43 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி உள்ளது. இருப்பினும், இந்த உயர்வால் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த சுமையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கும்.

இந்த வரி அதிகரிப்பும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லரை விற்பனை விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி இருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன.

முதலமைச்சர் கண்டனம்

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது, ‘சாடிஸ்ட்’ பா.ஜ.க. அரசுக்கு மிகவும் பொருந்தும்.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது. மக்களே, அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது. இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. மத்திய பா.ஜ.க. அரசே, தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு முதyமைச்சர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

இதேபோல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டதற்காக மத்திய அரசால் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 60 டாலர் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்பட்டுவிட்டதால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங்பூரி கடந்த வாரம் கூறியிருந்தார்.

அதற்கு மாறாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது நியாயமல்ல. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதன் மூலம் மத்திய அரசே அதை எடுத்துக்கொண்டதும் தவறு’ என்று கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை

இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது மத்திய பா.ஜ.க. அரசு. இதை வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

#lpg gas cylinder price #lpg #petrol price

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *