திருவனந்தபுரம், நவ. 20–
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டம் அலைமோதுவதால், கடந்த 4 நாட்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த புதன்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கொட்டும் மழைக்கு இடையே தரிசனம் செய்தனர். இதனால், முதல் நாளில் மட்டும் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது.
2 லட்சம் பேர் தரிசனம்
சபரிமலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்தபோதும், பக்தர்கள் நனைந்தவாறு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் ஆதார் கார்டுகளை காட்டி முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம் எனவும் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.
பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பி செல்ல, கேரளா அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவசம்போர்டு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கேரளா மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உடனடியாக முன்பதிவு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளனர்.