திருவனந்தபுரம், நவ. 25–
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், ஹெலி கேரளா என்ற நிறுவனம், கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தது. கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் விஐபி தரிசனம் வரை அனைத்திற்கும் ரூ.45,000 வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் கண்டனம்
இந்த விளம்பரத்தைப் பார்த்த கேரள உயர்நீதிமன்றம் தானே விசாரணைக்கு வழக்கை எடுத்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேவசம் போர்டு அனுமதியின்றி சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை தனியார் நிறுவனம் விளம்பரப்படுத்தியதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விளம்பரம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.