செய்திகள்

சந்திரயான்-–5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தகவல்

Makkal Kural Official

கன்னியாகுமரி, மார்ச்.18-

சந்திரயான்-–5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: சந்திரயான்–5 திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து சில நாட்களுக்கு முன்னர்தான் பெற்றுள்ளோம். இந்த திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து நாங்கள் செயல்பட உள்ளோம். இது, சந்திரயான்–5 திட்டத்தின் அறிவியல் திறன்களை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 2023 ஆகஸ்ட் 23-ல் சந்திரயான்-–3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் எந்தவித சேதாரமும் இன்றி சாப்ட் லேண்டிங் மூலம் விக்ரம் லேண்டரை தரை யிறக்கியது. இதன் மூலம், இந்த சாதனையை படைத்த உலகின் 4வது நாடு என்ற பெருமை ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியாவுக்கு கிடைத்தது.

சந்திரயான்–5 திட்டம் நிலவை முழுமையாக ஆராய்ச்சி செய்யும் நோக்கம் கொண்டது. எனவே, சந்திரயான் 3 -ல் பயன்படுத்தப்பட்டது போன்று சிறிய வகை ரோவர் இதில் இடம்பெறாது. அதற்கு பதிலாக 250 கிலோ எடையுள்ள பெரிய ரோவரை அனுப்பி சந்திரனின் மேற்பரப்பை விரிவாக ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.

சந்திரயான் -5 மற்றும் 6-வது திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது. இது, விண்வெளித் துறையில் 44 பில்லியன் டாலர் மைல்கல்லை தொடுவதற்கு ஏதுவாக அமையும். இதனை தொடர்ந்து ககன்யான் திட்டத்தையும் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும்.

இதனை யடுத்து சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சி களில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

நிலவில் நீர் இருப்பதை முதன் முதலில் கண்டுப்பிடித்தது இஸ்ரோ தான். நிலவில் இறங்குவதே பெரிய விஷயம், அதற்கு பிறகு அங்குள்ள மாதிரிகளை எடுக்க ‘ரோபோட்டிக்’ தேவை. இதுதொடர்பான சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது. சந்திரயான்-–4 திட்டம் மூலம் நிலவில் என்ன வகை கனிமங்கள் உள்ளன? என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய உள்ளோம். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கு முன்பாக 3 ஆள் இல்லாத ராக்கெட்டுகள் அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது. முதல் ராக்கெட் ஏவுவதற்கான பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் தீவிரமாக நடக்கிறது. அது வெற்றி பெற்றால் அடுத்து 2 ராக்கெட்டுகளும் ஒன்றரை ஆண்டுகளில் விண்ணில் ஏவி சோதனை செய்யப்படும். இதற்காக விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களின் பாதுகாப்பிற்காக, அமரும் பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து சோதனை நடந்து வருகிறது.

இந்தியாவிற்கு சொந்தமான விண்வெளி நிலையம் 2035-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. 52 டன் எடை கொண்ட இந்த நிலையம் 5 பிரிவுகளாக பிரித்து ராக்கெட்டுகளில் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இதில் முதல் பிரிவு 2028-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்ப பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் அங்கிருந்து எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்.

கன்னியாகுமரியில் ரூ.100 கோடியில் விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் விண்வெளி மையம் அமைக்க இஸ்ரோ திட்டமிட்ட நிலையில், தமிழக அரசு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது. அதற்கு அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.

ஆக்சியம்-–4 திட்டத்தின் மூலம் உணவு பயிர்களை விண்வெளியில் வளர்க்க ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது. ஏற்கனவே தட்டை பயிர் விதைகளை விண்ணில் விளைவித்து சாதனை படைத்தோம். தொடர்ந்து விண்வெளியில் விவசாயம் என்ற புரட்சியை செய்வது குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் மைய இயக்குனர் ராஜராஜன் உடன் இருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *