செய்திகள்

‘சந்திரயான்–3’ விண்கலம் நாளை விண்ணில் பாய்கிறது

‘கவுண்ட்டவுன்’ துவங்கியது

சென்னை, ஜூலை.13-

‘சந்திரயான்–3’ விண்கலம் நாளை விண்ணில் பாய்கிறது. இதனை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 1 மணிக்கு தொடங்கியது.

‘சந்திரயான்–3’ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்–4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

‘சந்திரயான் 3’ விண்கலத்தில் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள ‘புரபுல்சன்’ பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.

பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்கியது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள ‘எல்.வி.எம்.3 எம் 4’ ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. சந்திரயான்–3 விண்கலம் ஆகஸ்டு 23 அல்லது 24-ந் தேதி நிலவில் லேண்டரை தரையிறக்க முயற்சிக்கும்.

ராக்கெட் ஏவுதலின்போது எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில், கட்டமைப்பு, கணினிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதிக எரிபொருளும் சேர்க்கப்பட்டு உள்ளது. நிலவில் தரையிறங்கும் லேண்டரின் கால்கள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. லேண்டர் தொடர்ந்து இயங்க அதிக ஆற்றல் உற்பத்திக்காக பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்–3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *