லக்னோ, பிப்.15–
உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் பஸ்–கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டத்தில் பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகா கும்பமேளாவுக்கு சத்தீஷ்கரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் சிலர் நேற்று காரில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார் பிரயாக்ராஜ் நகரில் மெஜா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மிர்சாபூர் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர். பஸ்சில் இருந்த பயணிகளில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விபத்திற்கான காரணம் பற்றி விசாரித்தனர். பலியானர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஸ்வரூப ராணி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மிர்சாபூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் பலர் இறந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.