சென்னை, ஜூலை19-–
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவும், சென்னையில் தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள் கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர்ப்பாதையில் வெளியேற்றுவதற்கு இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரிய விதிகளில் திருத்தம் செய்வதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டன.
சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது இந்த சட்டத்திருத்தங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.