கோவை, ஜன. 11–
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரை, ஜமேஷா முபின் வீட்டிற்கு நள்ளிரவில் அழைத்துச் சென்று, என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காரில் உள்ள சிலிண்டர் ஒன்று வெடித்து விபத்தில் சிக்கியது. எதிர்பாராத விபத்து என போலீசார் முதலில் கருதினர். ஆனால், தீபாவளியை ஒட்டி பயங்கரவாத தாக்குதல் முயற்சி நடத்த திட்டமிட்டிருந்ததும், அதற்கும் முன்னதாகவே கார் வெடித்து விபத்தில் சிக்கியதும் பின்னர் தெரியவந்தது.
ஜமேஷா முபின் வீட்டில் என்.ஐ.ஏ
இதுதொடர்பான விசாரணையில் உயிரிழந்தது தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த ஜமேஷா முபீன் என்ற நபர் என கண்டறியப்பட்டது. அவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிலையில் முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தௌபிக், சனாபர் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து சென்னையில் வைத்து விசாரித்தனர். இதையடுத்து இவர்கள் நேற்று காலை கோவை அழைத்து வரப்பட்டனர். பின்னர் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் விசாரணை
இந்நிலையில் இவர்களில் சனாபர் அலி, முகமது ரியாஸ், நவாஸ், தௌபிக் ஆகிய 4 பேரை மட்டும் நள்ளிரவு 11.30 மணி அளவில் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமேஷா முபின் இல்லத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களுடன் தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான போலீசார் உடன் சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக சில மணி நேரங்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஜமேஷா முபின் வீட்டில் இருந்த சந்தேகத்திற்கு உரிய பொருட்கள், ஆவணங்கள், கையெழுத்து பிரதிகள், அடுத்தகட்ட திட்டங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர்கள் அளித்த பதில்களை விரிவாக பதிவு செய்து கொண்டனர்.
இதனையடுத்து 4 பேரையும் உக்கடம் பகுதியில் உள்ள சனாபர் அலியின் வீடு, ஜி.எம்.பேக்கரி உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒட்டுமொத்த விசாரணையையும் வீடியோ பதிவாக பதிவு செய்து கொண்டனர். இதனால் கோவையில் நள்ளிரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.