ஐதராபாத், மார்ச் 15–
தெலங்கானா மாநிலத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்று முதல் அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வெய்யிலின் அளவு 36 முதல் 38 டிகிரியாக பதிவாகி வருகின்றது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலங்கானா அரசு வெளியிட்ட அறிவிப்பில், “மாநிலம் முழுவதும் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மழலை, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நிகழ் கல்வியாண்டின் மீதமுள்ள நாள்களில் காலை 8 மணிமுதல் பகல் 12.30 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும்.
12.30 க்கு மதிய உணவு
பள்ளிகளில் உள்ள மதிய உணவு, சத்துணவு பகல் 12.30 மணிக்கு அளிக்க வேண்டும். மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் பகல் 1 முதல் மாலை 5 வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.