புதுடெல்லி, ஏப். 7–
ஒரு நாள் கொரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறதது.
இந்நிலையில் கொரோனாவால் கடுமையான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பிரேசில், அமெரிக்காவை தாண்டி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை தரவுகளுடன் வெளியிடும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் 82 ஆயிரத்து 869 பேருக்கும், அமெரிக்காவில் 62,283 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளை பொறுத்தவரை பிரேசில் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,211 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 905 பேரும் இந்தியாவில் 631 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.