திருவனந்தபுரம், ஏப். 12–
கேரளாவில் 2020–ல் கோவிட் தொற்று பாதித்த 19 வயது பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலமான 2020ம் ஆண்டு செப்டம்பர் 5–ந் தேதி கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் அடூர் பொது மருத்துவமனையில் இருந்து பந்தளத்தில் உள்ள அர்ச்சனா மருத்துவமனை கோவிட் சிறப்பு வார்டுக்கு தொற்று பாதித்த 19 வயது பெண் ஆம்புலன்சில் மற்றொரு நோயாளியுடன் அழைத்துச் செல்லப்பட்டார். மற்றொரு நோயாளியை பாதி வழியில் இறக்கிவிட்டுவிட்டு, பந்தளம் செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத பகுதியில் நிறுத்தி 19 வயது பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
அதன்பின் அப்பெண்ணை கொண்டு சேர்க்கவேண்டிய பந்தளம் மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் தப்பியோடினார். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்ததை மருத்துவமனை ஊழியர்களிடமும் பெற்றோரிடமும் முறையிட்டார். இதைத்தொடர்ந்து வழங்கப்பட புகாரில், அடுத்த நாளே அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் நௌபல் கைது செய்யப்பட்டார்.
கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த காலகட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று அவர் குற்றவாளி என உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.