சென்னை, ஆக. 19–
சென்னை மணலியில் கொசு விரட்டும் லிக்விட் மிஷின் எரிந்து மூச்சு திணறல் ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை மணலி எம்.எம்.டி.ஏ 2 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் உடையார். ஸொமோட்டோ (zomato) ஊழியரான இவர், இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது காலில் அடிபட்டு, சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி செல்வி மருத்துவமனையில் உள்ளார்.
4 பேர் பரிதாப பலி
இந்நிலையில், இந்த தம்பதிகளின் 3 குழந்தைகளை இரவில் கவனித்துக் கொள்வதற்காக, செல்வியின் தாய் சந்தான லட்சுமி ஊரிலிருந்து வந்துள்ளார். அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகம் என்பதால், கொசு விரட்டும் லிக்விட் மிஷினை பயன்படுத்தி உள்ளார். அந்த மிஷின் சூடாகி உருகி அருகில் இருந்த அட்டைப்பட்டியின் மீது விழுந்துள்ளது.
அதிலிருந்து அதிக அளவில் புகை வெளியேறி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த செல்வியின் 3 குழந்தைகள் மற்றும் தாய் ஆகிய 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மாதவரம் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.