இஸ்லாமாபாத், ஏப். 19–
பாகிஸ்தானில் கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
சர்வதேச பிராண்டுகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தது தான் என்று தகவல் பரவியது. இதனால் சர்வதேச பிராண்டுகளான கேஎப்சி, பிட்சா ஹட், பூமா, டொமினோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் கே.எப்.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடக்கிறது.
கே.எப்.சி. சிக்கன் கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கராச்சியில், இரண்டு கடைகள் தீக்கிரையாக்கப் பட்டன. ஆயுதம் ஏந்திய கும்பல்கள் கே.எப்.சி. சிக்கன் கடைகளுக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என பாகிஸ்தான் உள்துறை இணையமைச்சர் தலால் சவுத்ரி தெரிவித்தார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி இஸ்மாயில் பேசுகையில், ‘முக்கிய குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை வலைவீசி தேடி வருகிறோம். இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போராட்டத்தின் போது ஒரு நபர் மார்பில் தோட்டா பாய்ந்து உயிரிழந்தார்’ என்று தெரிவித்தார்.