முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, நவ.4-–
கேரளாவில் நடந்த ரெயில் விபத்தில் பலியான சேலத்தைச் சேர்ந்த 2 தம்பதிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளே சொரனூர் ரெயில் நிலையத்தில், தண்டவாளங்களில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் அகற்றினர். அப்போது அந்த வழியாக டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ரெயில் வந்தது. இந்த ரெயில் எதிர்பாராதவிதமாக மோதி 4 தூய்மைப்பணியாளர்கள் இறந்தனர். இறந்தவர்கள் சேலத்தை சேர்ந்த தம்பதிகள் என்பது தெரியவந்தது. இதற்கிடையே இறந்த தம்பதிகளுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க உள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–-
கேரள மாநிலம், பாரதப்புழா பாலம் அருகில் கடந்த 2-–ந் தேதி பிற்பகல் கேரள எக்ஸ்பிரஸ் ரெயில் எதிர்பாராதவிதமாக மோதியதில் ரெயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம், அடிமலைபுதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 55), வள்ளி (வயது 45), டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 45) மற்றும் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராஜம்மாள் (வயது 43) ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்திக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.