திருவனந்தபுரம், டிச. 6–
கேரள அரசின் பூஜா பம்பர் லாட்டரி சீட்டில் பால் பண்ணை ஊழியருக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது.
கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தில் விற்ற டிக்கெட்டுக்கு விழுந்தது. முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த 41 வயதான தினேஷ்குமார் வாங்கியுள்ளார். இவருக்கு வரிகள் பிடித்தம் போக ரூ.6.12 கோடி கிடைக்க உள்ளது.
லாட்டரியில் முதல் பரிசு வென்றுள்ள தினேஷ்குமார், நீண்ட காலமாக லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் கொண்டவராம்.
இது குறித்து தினேஷ்குமார் கூறுகையில், ஒவ்வொரு முறையும் குறைந்தது 10 டிக்கெட்டுகளை வாங்குவேன். அப்படித்தான் இந்த முறையும் 10 டிக்கெட்டுகள் வாங்கியதில் ஒரு டிக்கெட்டிற்கு பரிசு அடித்துள்ளது. பால் பண்ணையில் ஊழியராக பணி செய்து வருகிறேன். லாட்டரியில் பரிசு அடிப்பது இதுவே முதல் முறையாகும் என்று கூறியுள்ளார்.