செய்திகள்

குழந்தைகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கினார்

Makkal Kural Official

சென்னை, செப்.19-–

‘குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கினார்.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-–25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யும்போது; “குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க ‘புதிய ஓய்வூதிய திட்டம்’ தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்தபடி, என்.பி.எஸ். வாத்சல்யா ஓய்வூதிய திட்டத்தை காணொலி காட்சி மூலம் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, நெல்லை உள்பட நாடு முழுவதும் 75 இடங்களில் இந்த நிகழ்ச்சி ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து புதிதாக கணக்கு தொடங்கிய சிறுவர்களுக்கு அடையாள அட்டைகளையும், பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகளிடம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, ‘சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமூக பாதுகாப்பை வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களுக்கும் விரிவு படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் அளிக்கும் என்.பி.எஸ். வாத்சல்யா திட்டம் அவர்களது பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். குறைந்தது ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தி திட்டத்தில் சேரலாம். சேமிப்புத் தொகைக்கு உச்சவரம்பு ஏதுமில்லை. இந்தத் திட்டம், பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் பொருந்தும். அவர்களுக்கான சந்தா தொகையை பெற்றோர் அல்லது பாதுகாவலர் செலுத்தலாம். இந்தத் திட்டக் கணக்குகளை வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் உள்ளிட்ட அமைப்புகள் வாயிலாகவும், இ-என்.பி.எஸ். (e-NPS) என்ற இணையதளம் வாயிலாகவும் தொடங்கலாம்.

பாதுகாவலரின் ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை இருப்பிடத்திற்கான ஆதாரமாக காட்டலாம்.

பாதுகாவலரின் வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) அல்லது படிவம் 60-ன் படி உறுதிமொழி அளித்தும் கணக்கு தொடங்கலாம். கணக்குத் தொடங்கப்படும் குழந்தையின் வயது சான்றாக, பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் போன்றவற்றையும் அடையாளமாக பயன்படுத்தலாம். பாதுகாவலர் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தால் அதற்கான வங்கி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்’ என்றார்.

சென்னையில் நடந்த விழாவில் ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் இளங்கோவன், பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை, நபார்டு வங்கி துணை பொதுமேலாளர் சோமசுந்தரம், செயல் இயக்குனர் தன்ராஜ், பொதுமேலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் புதிதாக கணக்கு தொடங்கிய சிறுவர், சிறுமியர் என 35 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

குழந்தை பிறக்கும் போது அதனுடைய பெயரில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்தினால் அந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது ரூ.25 லட்சம் கிடைக்கும். குழந்தை தனது பருவ வயதை எட்டி, தாமாக வருவாய் ஈட்டி, சந்தா தொகையை செலுத்தினால், அவருடைய ஓய்வு வயதின்போது ரூ.12.5 கோடி வரை கிடைக்கும். குழந்தையின் மேற்படிப்பு, குறிப்பிட்ட வகை உடல்நலக் குறைபாடு, உடல் ஊனத்திற்கான சிகிச்சை போன்ற தேவைகளுக்காக, முதலீடு தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்தை 3 முறை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 18 வயது நிரம்பும்போது, இத்திட்டத்தி லிருந்து வெளியேறிக் கொள்ளவோ அல்லது தொடர்ந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கோ அனுமதி அளிக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *