சென்னை, ஜன. 22–
வேலியே பயிரை மேய்வது போல், போலீசாரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடைவில்லை என்றும், இந்த வழக்கில் மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவரை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதால் ஜாமீன் கோரிய விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வேலியே பயிரை மேய்ந்தது போல் போலீசாரே குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட இந்த வழக்கினை சாதாரண வழக்காக எடுத்து கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.