சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் தகவல்
சென்னை, டிச.4–
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் udyamregistration.gov.in என்ற இணையதளத்தினுள் நுழைந்து மிக எளிதாக, தாமாகவே உத்யம் பதிவுச் சான்றிதழைப் பெறலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.
மத்திய அரசு 2020–ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின் படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் ஆகிய இரட்டைக் கூட்டு அளவுகோலின் படி வகைப்படுத்தப்படுகின்றன.
இதன்படி, இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.1 கோடிக்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் ரூ.5 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது குறு நிறுவனம். இவை முறையே ரூ. 10 கோடிக்கு மிகாமலும் ரூ.50 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது சிறு நிறுவனம். இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.50 கோடிக்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் ரூ.250 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது நடுத்தரத் தொழில் நிறுவனம்.
இத்தகைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் மூலம் தம் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார், ஆதாரோடு இணைக்கப்பட்ட அலைபேசி எண் மற்றும் பான்கார்டு இருந்தால் தமது உற்பத்தி, வணிக அல்லது சேவைத் தொழில் நிறுவனத்துக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் பெற விரும்பும் எவரும் udyamregistration.gov.in என்ற இணையதளத்தினுள் நுழைந்து மிக எளிதாக, தாமாகவே உத்யம் பதிவுச் சான்றிதழைப் பெறலாம்.
மாவட்டத் தொழில் மையம், உத்யம் பதிவு குறித்த விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு தேவைப்படுவோருக்கு உத்யம் பதிவுச் சான்றிதழ் இணையவழி பெற ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் வழங்குகின்றன. இவையன்றி வங்கிகளும் Udyam Assisted Filing முறை மூலம் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற உதவுகின்றன.
சமதான் தளம்
உத்யம் பதிவுக்கான தளத்திலேயே அரசுத்துறை கொள்முதலில் பங்கு பெறுவதற்கான அரசு மின்சந்தை (GeM), பெருநிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தாம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உரிய காலக்கெடுவுக்குள் வழங்காமை குறித்த சிக்கல்களை அணுகுவதற்காக சமதான் (SAMADHAN) தளம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான விற்பனைத் தொகை குறித்தகாலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதான TReDS தளம் இவற்றிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறவும், அவை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன்பெறவும், உத்யம் பதிவுச் சான்றிதழ் அடையாள அட்டையாகிறது.
உத்யம் பதிவு குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் மக்களைத்தேடி சேவைகள் என்ற அடிப்படையில் உத்யம் பதிவுக்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் வட்டார நிலைகளிலும் பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் மட்டத்தில் எதிர்வரும் காலங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தெளிவான விளக்கம்
அதுமட்டுமின்றி, தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநரை நேரடியாக அணுகினால் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறும் நடைமுறை தெளிவாக விளக்கப்படும். ஆதார், ஆதாரோடு இணைக்கப்பட்ட அலைபேசி எண் மற்றும் பான்கார்டு இவற்றுடன் நேரடியாக அணுகும் பட்சத்தில் உத்யம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து தரப்படும்.
உத்யம் பதிவுச்சான்றிதழ் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இவ் வரியவாய்ப்பினைப் பயன்படுத்தி இப்பதிவின் தேவை மற்றும் பதிவினால் பெறத்தக்க பயன்களை அறிந்து உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறவேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.