செய்திகள்

குமரி அனந்தன் மறைவிற்கு தமிழிசையை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல்

Makkal Kural Official

சென்னை, ஏப். 11–

தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் தெரிவித்தார்.

தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் கால் பதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார்.

டெல்லியில் இருந்து நேற்றிரவு 10.20 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா தங்கினார்.

இன்று காலை நட்சத்திர ஓட்டலில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த குமரி அனந்தன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழிசைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமித்ஷாவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என தமிழிசை தெரிவித்தார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனனின் கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

இதனையடுத்து சாலிகிராமத்திலிருந்து மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். பா.ஜ.க மாநில தலைவர் நியமனம், தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மாலை வரை தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *