திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் ரூ.37 கோடி கண்ணாடி இழை பாலம்: 30–ந் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
25 தகைமையாளர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்
3 நாள் கோலாகல கொண்டாட்டத்தில் பட்டிமன்றம்,
கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி, ஓவியக் கண்காட்சி
சென்னை, டிச.27–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியால் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதைத் தொடர்ந்து இம்மாதம் 30–ந் தேதி முதல் ஜனவரி 1–ந் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்துகிறார். இதன் காரணமாக முக்கடல்கள் கூடும் குமரிமுனை இன்று முதல் விழாக்கோலம் கண்டு குதூகலம் அடைகிறது.
முதல் நாள் நிகழ்ச்சிகள் 30–ந் தேதி, திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. அத்துடன் முதலமைச்சரின் தீவிர முயற்சிகளின் பயனாக 37 கோடி ரூபாய் செலவில் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலம் கட்டப்பட்டு அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அத்துடன் முதலமைச்சர் திருக்குறள் நெறிபரப்பும் 25 தகைமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்.
மாலை 7 மணிக்கு சொல்வேந்தர் சுகி.சிவம் தலைமையில் “திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே – சமுதாயத்திற்கே எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
பட்டிமன்றத்தில் தனிமனிதருக்கே எனும் கருத்தை வலியுறுத்தி தா.ராஜாராம், சே.மோகனசுந்தரம், மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் வாதிடுகிறார்கள். சமுதாயத்திற்கே எனும் கருத்தை வலியுறுத்தி புலவர் இரெ.சண்முகவடிவேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோர் வாதிடுகிறார்கள். சொல்வேந்தர் சுகி.சிவம் தீர்ப்பு வழங்கி உரையாற்றுகிறார்.
குன்றக்குடி அடிகளார், வைரமுத்து
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் 31–ந் தேதி செவ்வாய்க்கிழமை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வரவேற்புரையாற்றுகிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றுகிறார்கள்.
முதலமைச்சர் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டி; திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலரை வெளியிட்டு; திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவியர்க்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை நிகழ்த்துகிறார். அதனைத் தொடர்ந்து, பியானோ இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் அவர்களின் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா நன்றியுரையாற்றுகிறார்.
தொடர்ந்து காலை 11.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கம் தொடங்குகிறது. பேராசிரியர் அ.கருணானந்தன் சமகாலத்தில் வள்ளுவர் தலைப்பிலும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறளும் சங்க இலக்கியமும் எனும் தலைப்பிலும், புலவர் செந்தலை ந. கவுதமன் வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம் எனும் தலைப்பிலும்,
வழக்கறிஞர் அருள்மொழி திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு எனும் தலைப்பிலும், கரு.பழனியப்பன் வள்ளுவம் காட்டும் அறம் எனும் தலைப்பிலும் , பேராசிரியர் விஜயசுந்தரி திருக்குறளில் இசை நுணுக்கம் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தி திருவள்ளுவரின் பெருமைகளை அகிலத்திற்கு எடுத்துரைப்பர்.
கலைநிகழ்ச்சிகள்
தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை பல்வேறு கலைஞர்கள் பங்குபெறும் அரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
1.1.2025 புதன்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சிகள்
காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திருக்குறள் ஓவியக் கண்காட்சியைத் திறந்துவைத்து நினைவுப் பரிசுகள் வழங்குகிறார்.
கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா நன்றியுரை ஆற்றிட நாட்டுப்பண்ணுடன் விழா அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிறைவுபெறுகிறது. ரூ.11 கோடி ஒதுக்கீடு
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டு நிறைவையொட்டி சில வெள்ளி விழாப் பணிகள் திராவிட மாடல் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் என 12.12.2024 அன்று அறிவித்திருந்தார். இந்த வெள்ளிவிழாப் பணிகளை நிறைவேற்றுவதற்காக, மொத்தம் 10 கோடியே 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்;
* பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
* திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டிருக்கின்ற இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு, எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
* திருவள்ளுவரின் உருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் இணையக் கழக மையங்கள், தமிழ்ச் சங்கங்கள், பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள், புது டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.
திருக்குறள் தொடர்பான
கருத்தரங்கம், பேச்சரங்கம்
* வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் இணையக் கழக மையங்கள் மூலமாகத் திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
* தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட நூலகங்களிலும், இன்றைய விழா நாளில் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு திருக்குறளின் பெருமைகளை உணர்த்துகின்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுத் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
* திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் முதலியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
திருவள்ளுவர் சிலை கலைஞரால் 25 ஆண்டுகளுக்குமுன் புத்தாயிரம் ஆண்டின் முதல் நாள் 1.1.2000 அன்று குமரிமுனையில் திறந்து வைக்கப்பட்ட மாபெரும் விழா உலகமே பாராட்ட – ஈழம், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜப்பான் முதலான பல வெளிநாடுகளிலிருந்து அறிஞர்களும், திருவள்ளுவர்பால் பற்றும், பாசமும் கொண்டுள்ள சான்றோர்களும், இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஒட்டுமொத்த தமிழகத்திலிருந்து பேரறிஞர்களும், பொதுமக்களும் திரளாக வருகைதந்து விழாவைப் பெருமைப்படுத்தி வெற்றி தேடித் தந்தனர் என்பது நினைவிருக்கலாம்.