போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
சென்னை, ஜன.27-
குடியரசு தின விழாவையொட்டி சென்னை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குடியரசு தின விழாவையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் கவர்னரின் மனைவி லட்சுமி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை, அவருடைய கணவர் டாக்டர் சவுந்தரராஜன், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பாலகங்கா, பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா, பிரமுகர் சரத்குமார், தே.மு.தி.க. துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சமூக சேவைகள் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட கோவையைச் சேர்ந்த இதயங்கள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ணன் சாமிநாதன், சென்னையை சேர்ந்த ஹோப் பப்ளிக் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் நாகராணி, சுற்றுச்சூழல் பிரிவில் சென்னை சிட்லபாக்கம் ரைசிங் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் காசோலை, பாராட்டு சான்றிதழையும், சமூக சேவைக்கான தனிநபர் பிரிவில் ராமலிங்கம் (சென்னை), ஜெ.சுவர்ணலதா (கோவை), ராஜ்குமார் (மதுரை) ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் காசோலை, பாராட்டு சான்றிதழையும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். மேலும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 49 மாணவ–மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழையும் கவர்னர் வழங்கினார்.
இதுதவிர, 2023ம் ஆண்டில் கொடிநாள் நிதி அதிகம் வசூலித்த மாவட்டங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களை சென்னை, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்கள் பெற்றன. இந்த மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களுக்கு சுழற்கோப்பைகளை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். அதுமட்டுமல்லாமல் அதிகளவில் கொடிநாள் நிதி பங்களிப்பு வழங்கிய சென்னை, பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கும், காஞ்சீபுரம் மாநகராட்சிக்கும் தனியாக விருதுகளும் வழங்கப்பட்டன.
வழக்கமாக குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்திகள், அரங்கேற்றப்பட்ட சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சி மேடையில் விருதுகள் அறிவிக்கப்படவில்லை.
கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்து இருந்தன.
பா.ம.க., புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதுதவிர, நாம் தமிழர் கட்சிக்கும் அழைப்பு சென்றதா? என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. அந்த கட்சி தரப்பிலும் யாரும் பங்கேற்கவில்லை. வழக்கமாக கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்ளவில்லை.