சென்னை, ஜன. 6–
குடிக்க மது தராததால் பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிக்சிசை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.
திருச்சூரைச் சேர்ந்தவர் மோகன் (வயது 69). கடந்த 2ம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் திருவல்லிக்கேணி ரெயில் நிலையம், கழிவுநீர் அகற்றும் பம்பிங் ஸ்டேஷன் அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மகேந்திரன் என்கிற மொட்டை என்பவர் (வயது 30) மோகன் வைத்திருந்த மதுவை குடிக்க கேட்டுள்ளார்.
அதற்கு மோகன் மறுத்ததால் அவரை அங்கிருந்த பீட்ட பாட்டிலால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் ரத்தக் காயம் ஏற்பட்ட மோகனை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்நோயாளியாக மோகன் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மெரீனா போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.