ஜெய்ப்பூர், டிச. 1–
குஜராத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், அனைவரும் வாக்களியுங்கள் என குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்து ராகுல்காந்தி எம்பி டுவீட் செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இதுவரையில் பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டியாக இருந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி களமிறங்கி மும்முனை போட்டியாக மாற்றியுள்ளது.
முதல்கட்டத் தேர்தல்
மூன்று கட்சிகளும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள ன182 தொகுதிகளில் இன்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.பியும், அக்கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், ‘குஜராத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், அனைவரும் வாக்களியுங்கள். வேலை வாய்ப்புகள் பெற, மலிவான விலையில் எரிவாயு சிலிண்டர் பெற, விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்திட வாக்களியுங்கள். குஜராத்தின் முற்போக்கான எதிர்காலத்திற்காக, பெருந்திரளாக வாக்களித்து இந்த ஜனநாயக திருவிழாவை வெற்றியடையச் செய்யுங்கள் என, வாக்காளர்களுக்கு டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.